Tuesday, November 4, 2014

நாலடியார் - 32.அவையறிதல்-பாடல் 311 முதல் 320 வரை



பாடல்-311


மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.

ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தெரிந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.

பாடல்-312


நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

தன் வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, உட்கருத்தை உணர்ந்தவன் போல் தன்னைக் கருதிக்கொண்டு, அவையைக் கூட்டும் தீய புலவனை, அடக்கமுடைய நற்புலவர்கள் சேரமாட்டார்கள். ஏனெனில் அந் நற்புலவர்கள் வருகையால், அத்தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால், அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான். அல்லது தோளைத் தட்டி ஆர்த்துச் சண்டைக்கு எழுந்திருப்பான்.

பாடல்-313

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.



பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு விரைந்து சொல்ல ஆசைப்படுவோர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறியார்; தாம் கற்றவற்றைப் பிறர் விரும்பிக் கேட்குமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார்; இவ்வாறிருந்தும் விடாமல் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.

பாடல்-314

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.

ஓர் அறிவற்றவன் ஆசிரியரை வழிபட்டுக் கற்காமல், பள்ளியில் அவ்வாசிரியர் பிறருக்குச் சொல்லுங்கால், தற்செயலாகத் தெரிந்துகொண்ட ஒரு பாட்டினை, கற்றோர் அவையில் நாணாமல் கூறித் தன் புல்லறிவினை வெளிப்படுத்துவான்.

பாடல்-315


வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார். (அறிவிலார் முன் அறிஞர் தமது நாவன்மையைக் காட்டிச் சிறுமை அடையக் கூடாது என்பது கருத்து).

பாடல்-316


பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக 'என்னே இவள் செய்த பாவம்!' என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர். (அறிவிலிகள் தவறாகக் கூறினாலும் அறிஞர்கள் அமைதியோடு இருக்க வேண்டும் என்பது கருத்து).

பாடல்-317


பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

பாடல்-318


புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்து அவற்றின் பொருள் அறியாதவராகிக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும் அப்புலவர்கள் வேறு; அவற்றின் பொருளைத் தெரிந்து மற்றவர்க்கும் தெரிவிக்கின்ற புலவர்கள் வேறு. (புத்தகங்களைச் சேர்த்து வைப்பதோடு அவற்றைப் படித்துப் பயனடைய வேண்டும் என்பது கருத்து).

பாடல்-319


பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு வேந்தே! நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விரித்துக் கூறும் அகல உரை, சாரங்களை மட்டும் கூறும் நுட்ப உரை, வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்ட பொருளான விசேட உரை ஆகிய இந்நான்கு வழிகளிலும் பொருளை விளக்கிக் கூறாத சொற்கள் நூலிற்குச் சிறந்த உரையாகுமோ? ஆகாது.

பாடல்-320


இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

உயர்குடிப் பிறப்பு இல்லாதவர் எவ்வளவுதான் நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் இன்னொருவரது சொற்களில் உள்ள குற்றங்களைப் பிறர் அறியாதவாறு காத்தற்குரிய அடக்கமுடைமை உடையவரோ? அல்லர், நற்குடிப் பிறந்த நல்லறிவாளர். நூற்பொருள்களைத் தெளிவாக உணராதவரது புல்லிய அறிவினைத் தாம் அறிந்தாலும் அறியாதவர்போல் இருப்பர். (பிறர் குற்றம் கண்டு இகழாது இருப்பவரே அவைக்கு உரியர்).

No comments:

Post a Comment