Wednesday, February 18, 2015

பழமொழி நானூறு - 106 முதல் 110 வரை



பாடல்-106

வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொனி - காட்டப்
பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு.

முன்னொரு காலத்தில்,  நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை,  கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர்,  வளைந்து சூழ்ந்தார்களாகி,  நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட,  ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள். அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி;

(க-து.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.


'உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.

பாடல்-107

பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.

கன்றினை உடைய பசு,  வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!,  மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள், மயிரினை நீக்குதல் செய்யா; (ஆனால்)  பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வத்தை ஒருகாற் பெற்றாலும்,  வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர், தாமுந் துய்த்தலுமிலராகி, பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ

(க-து.)கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.


'மரங் குறைப்ப மண்ணா மயிர்' என்பது பழமொழி.

பாடல்-108


உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா
தழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்றே றாதலும் உண்டு.

 விளங்குகின்ற இழையினை உடையாய்!, ஒலியினையுடைய பழைய நகரில், கடைத்தெருவின்கண்,  நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று,  வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்),  ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை,  அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும், அவனைப் பொருளிலான்என்று இகழா தொழிதல் வேண்டும்.


(க-து.)பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.

.
பழங்கன்றே றாதலும் உண்டு' என்பது பழமொழி.

பாடல்-109

மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை.

கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்!,  உண்மையாக ஆராயின்,  உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?,  ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள்,  குறித்த ஒருபருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வதுமழையேயாதலான்.

(க-து.) உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.

பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.

பாடல்-110


கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.

 முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்!,  இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில்,  அவர்தங் குறிப்பினையும்,  தன்னால் உயிர்கொள்ளப்படுதலுடையார் கூறும், மாற்றத்தினையும்,  ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல),  அரசன், குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின், செய்வது என்ன இருக்கின்றது?

(க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.


'செய்வது என் வல்லை அரசு ஆட்கொளின்' என்பது பழமொழி.



No comments:

Post a Comment