Monday, December 22, 2014

பழமொழி நானூறு - 96 முதல் 100 வரை



பாடல்-96

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
ஈடில் லதற்கில்லை பாடு.

‘வீடு அழிந்தவிடத்து'  அதிலுள்ள மரங்கள்,  பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே,  - அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும்,  பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை.

(க-து.) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர்.


'ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.

பாடல்-97


தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
பழம்பகை நட்பாதல் இல்.

 முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால், கிழங்குடைய புல் முதலியவெல்லாம்,  முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி,  அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.

(க-து.) பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது.

பழம்பகை நட்பாதல் இல். என்பது பழமொழி


பாடல்-98

வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப்
புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ
அள்ளில்லத் துண்ட தனிசு.

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே!, வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும்,  இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது?, கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே, அள் இல்லத்து உண்ட தனிசு  சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனை ஒன்குமன்றோ?

(க-து.) அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.


'அள்ளில்லத் துண்ட தனிசு' என்பது பழமொழி.


பாடல்-99

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில்,  மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு,  இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க,  இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே,  தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.

(க-து.)காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.


'கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.

பாடல்-100


நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ
திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கறுப்பச் சோருங் குடர்.

செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார்,  வறுமையுடையார்க்கு,  அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா;  தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம்,  குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தையொக்கும்.

(க-து.) செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.


'குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்' என்பது பழமொழி

Thursday, December 18, 2014

பழமொழி நானூறு - 91 முதல் 95 வரை



பாடல்-91

பெருமலை நாட! பிறரறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று.

 பெரிய மலைநாட்டை உடையவனே!,  பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை, நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள்,  அரிய இரகசியத்தை,  நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல்,  பனையின் மீது பஞ்சினை வைத்து, கொட்டினாற் போலாம்.

(க-து.) அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக.அல்லாரிடத்துக் கூறற்க.


'பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டது' என்பது பழமொழி.

பாடல்-92

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.

 இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன்,  பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, பதவியை அடைந்தான், (ஆதலால்)  பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.

(க-து.) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன்பெறுவர் என்பதாம்.


'பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.

பாடல்-93


சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்.

அறிவு நிரம்பிய அமைச்சர்கள். மிகுதியானவைகளைக் கூறி இது பெருங்குற்றமல்லவென்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும்,  அன்றிரவு கழிந்த பின்னர், முன்னாள், பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்),  செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

(க-து.) முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம்.


'முறைமைக்கு மூப்பிளமை இல்' என்பது பழமொழி.

பாடல்-94

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர்.

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!,  நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும்,  (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள், நல்ல  குடியின்கட் பிறவாதார்,  (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி?,  யாவரே யாயினும்,  சொல்லின்கண் சோர்வுபடாதார்இலர்.

(க-து.) யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.

'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி


பாடல்-95

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.

தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; வாளாற் செத்துக, அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக,  மனம் பொருந்தி,  நுகத்தின்கண் நடுவு நிற்கும்பகலாணியை ஒப்ப,  ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

(க-து.) காய்த லுவத்த லின்றிஒழுகும் அமைதியே தவமாம்.


'நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.

Wednesday, December 10, 2014

பழமொழி நானூறு- 86 முதல் 90வரை



பாடல்-86

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக்
கரையிருந் தார்க்கெளிய போர்.

 வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கில், அரங்கின்கண் பக்கத்திருந்தார்க்கு, எளியதாகத் தோன்றும் அதன் நுட்பம் ,அறியாது ஆடுவாற்கு அரியதாகத் தோன்றும் (அதுபோல),  பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும்,  நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய்,கருமத்தைச் செய்யப்புகுந்தவன்,  அழிவினை அடைவான்.

(க-து.) கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும்வேண்டப்படுவ தொன்று.

'வட்டுக் கரையிருந்தார்க் கெளிய போர்' என்பது பழமொழி.

பாடல்-87

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

 தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே,  பார்ப்பனரும்.  நாய் கதுவியதாயினும்,  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல)  கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல,  கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல்செய்க.)

(க-து.) சிறந்த பொருள்களைஇழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார்; உடும்பின் புலால்மிகச் சிறந்த வையுடையது என்பது கருதியே பார்ப்பாரும்உண்பர் என்றார்.காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்குஅறிகுறி என்று கொள்ளுவர்.

பாடல்-88


தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்.

தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்!,  பிணி நீங்க விரும்புவோர்,  வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), மிகவும் மனம் இரங்கி,  தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு,  தாம்அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.

(க-து.)அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக்கூறுவார்கள்.

'மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.

பாடல்-89

கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று.

 இயமன்,  ஆராய்ந்து உயிரை உண்ணும்பொருட்டு, விரும்பித் திரிவானேயாயினும்,  தான் உண்ணவேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல),  கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல்,  தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச்செய்தவர்களும்,  தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.

(க-து.) கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டுநீங்குவார்கள்.


'எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.

பாடல்-90


செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும்,  பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும்,மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.

(க-து.) காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தைநிறைவேற்றுவார்.


'வெந்நீரில் தண்ணீர் தெளித்து' என்பது பழமொழி.


Friday, December 5, 2014

பழமொழி நானூறு - 81 முதல் 85 வரை



நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல்.

 விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே!,  ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை,காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல்,  ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.

(க-து.) செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.


'நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்துவிடல்' என்பது பழமொழி.

பாடல்-82


பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்
பெரி(து)ஆள் பவனே பெரிது.

 வில்லைப்போன்ற புருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்!, நன்மையையும்,  தீமையையும், நிரல்படப் புனைந்து, மருங்கு இருந்தார், சொற்களால் கூறவும் வேண்டுமோ?,  எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.

(க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.

'பெரிதுஆள்பவனே பெரிது அறியும்' - இஃது  பழமொழி.

பாடல்-83
உற்றதற்(கு) எல்லாம் உரம்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

 நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல்,  தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும், (அதுபோல்)கற்றறிந்தவர்கள்,  நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்யவேண்டுமோ? (வேண்டுவது இல்லை),தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.

(க-து.) கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமேஅழிந்தொழிதல் உறுதியாம்.

'நெல்செய்யப் புல்தேய்ந்தாற்போல நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்' என்பது பழமொழி.

பாடல்-84

இதுமன்னுந் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
தீநாள் திருவுடையார்க் கில்.

 தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய, விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!,   இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும், செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு),  அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்), தீய நாட்கள், முன்செய்த நல்வினை உடையார்க்கு உண்டாதலில்லை.

(க-து.) ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்.


'தீ நாள் திருவுடையார்க் கில்' என்பது பழமொழி.

பாடல்-85


ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.

 பொருந்திய அன்பினை உடைய உமையை,  ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான்,  ஏற்றுக்கொண்டான், தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து,  அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும்,  கொள்வார்கள்.

(க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.



நட்டாரை ஒட்டி யுழி.'

என்பது பழமொழி.

Thursday, December 4, 2014

பழமொழி நானூறு- 76 முதல் 80 வரை



பாடல்-76

செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை யஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது
எருத்து வலியநன் கொம்பு.

 தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்!,வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்),  போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை,  அடைந்தவர்கள்,  பிறர் ஒருவருக்குப் பயந்து,  மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.)

(க-து.) அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கஞ்சார்.

'கூரிது எருத்து வலியதன் கொம்பு' என்பது பழமொழி.

பாடல்-77

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட் டாக்கறக்கு மாறு.

 தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக்கொள்ளாது,
 நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக்கொள்ளுதல்,கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது, அங்ஙனங் கறவாதவனாகி,  அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

(க-து.) தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.


'கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டாக்கறக்குமாறு' என்பது பழமொழி.

பாடல்-78

இணரோங்கி வந்தாரை என் உற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்(கு)
அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்.

 பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே!, இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு, இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும்,  இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல)  கொத்துக்களைப்போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை,  எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும்,  ஆராயும் அறிவினர், உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர்.

(க-து.) அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காதுஉயர்வாகவே மதிப்பர்.

'அளறாடிக்கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.

பாடல்-79


கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
வளிதோட்கு இடுவாரோ இல்.

 மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!,  காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி,  தோள்களுக்கு இடவல்லார் உளரோ?,  இல்லை. (அதுபோல), பொருத்தமில்லாதவைகளைக் கூறும், நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை,  நாவினிடத்து அடக்குதல், இல்லையாம்.


(க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.


'வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.

பாடல்-80

காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து)ஊக்கல் குறுநரிக்கு
நல்லநா ராயங் கொளல்.

உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே!,  குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள்,   இயல்பாகச் செய்த தீங்கினை,  உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல்,  சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.

(க-து.) கீழோர் தவறுசெய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.

'குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல்' - இஃது பழமொழி.

Tuesday, December 2, 2014

பழமொழி நானூறு - 71 முதல் 75 வரை



பாடல்-71

வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
வெண்பாட்டம் வெள்ளந் தரும்.

 கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே!, பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலானவர்கள்,  வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும், எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒருபயனும் இன்று.

(க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது.


'வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.

பாடல்-72

நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.

மனத்தின்கண் கவலை யில்லாதவராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள்,  நெருங்கியுள்ள அவையில்,  அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு,  உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

(க-து.) கயவற்குஉறுதிப்பொருள்களைக் கூறுதலாகாது.

 'கடலுளால் மாவடித் தற்று' - இது பழமொழி.

பாடல்-73

யானுமற் றிவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரஞ் செயக்கிடந்த தில்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்ட லஃதே
இடைநாயிற் கென்பிடு மாறு.

 நானும் இவ்விடத்திலிருந்த என் தமையனும், ஒன்றுசேர்ந்து ஒரு செயல் செய்யப்புகுந்த இடத்து, பகைவருடைய வீரம் செய்யத்தக்கது யாதொன்றுமில்லையென்று கூறி,  அவரும் தம்மொடு சேர்ந்து, தமக்குத் துணைப் படையாக நின்று மாறுகொள்ளுமாறு,  பகைவரிடமிருந்து பிரிய அவரைத் தூண்டுதலாகியதானது, ஆடு காத்து நிற்கும் இடையர் நாய்க்குத் திருடர் எலும்பினையிடுதல் போல ஆகும்.

(க-து.) பகை யிரண்டாயவழி இன்சொற்கூறி அவற்றுள் ஒன்றனை வயப்படுத்துக என்றது இது.


'இடை நாயிற் கென்பிடு மாறு' என்பது பழமொழி.

பாடல்-74

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்(து)
உண்ணி பறித்து விடல்.

 கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து,  செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்துவிடுதலிக்கு ஈடாகும்..

(க-து.) தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


 பாடல்-75

பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
நாய்மேல் தவிசிடு மாறு.

(சொ-ள்.) பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே!, அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை, விரும்பி,  அறிவிற் சிறியார்க்குச் செய்தல்,   யானைமேல் இடவேண்டிய கல்லணையை, இழிந்த நாயின்மீதுஇட்டதை ஒக்கும்.

(க-து.) பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச்செய்தலாகாது.

'நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.

Sunday, November 30, 2014

பழமொழி நானூறு - பாடல் 66 முதல் 70 வரை


பாடல்-66

முன்னின்னா ராயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர
துன்னினா ரல்லார் பிறர்.

 நீர்நாடனே!,ஒரு குடியிற் பிறந்தவர்கள்,  முன்னர் இனிமையுடையவரல்லராக இருப்பினும்,  மிக்க துன்பம் வந்துற்றவிடத்து, பிரியார் - பின்னரும் இனிமையுடையரல்லராகிப் பிரிந்திரார்.,  ஒரு குடிப்பிறந்தவ ரல்லவராகிய பிறரை,  பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த சமயம் அதனைநீக்கப் புகுதலிலர்.


'பொன்னாச் செயினும் புகாஅர் புனலூரதுன்னினார் அல்லார் பிறர்' என்பது பழமொழி.

பாடல்-67


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.

வெற்றியையுடைய கருடன்மீது ஏறி வீற்றிருந்து,  உலகத்தைத் தாவியளந்த பெருமைபொருந்திய திருமாலே யாயினும், தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்), அறிவிற் சிறந்தோர்,  உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று,  மறைத்துச் செய்யும் காரியத்தின்கண்,அவருள் ஒருவரையும்தெளிதல் இலர்.

(க-து.)மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும்நம்புதல் கூடாது.
.

'சீர்ந்தது செய்யதார் இல்' என்பது பழமொழி.

பாடல்-68


எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்
தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப!
பனைப்பதித் துண்ணார் பழம்.

 இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே  எத்துணைப் பலவேயாயினும், நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட, தினையளவிற்றாயினும்,  அணித்த நாட்களுக்குள் பெறுதல் நல்லது, பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லையாதலான்.

(க-து.) பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க.



'பனைப் பதித் துண்ணார் பழம்' என்பது பழமொழி.

பாடல்-69


தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று.

 அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே!,  கால நெடுமையை நோக்கி,   நீரைத் தன்னிடத்தே பாதுகாத்துக்கொண்டதுபோல, தத்தமது பொருளையும்,  தம் சுற்றத்தாரிடத்துள்ள செல்வத்தையும்,  முற்படவே ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு, பொருளினைச் சேமித்துக் காவல்செய்க.

(க-து.) பின்னாளில் உதவும் பொருட்டுப்பொருளினைச் சேமித்துக் காவல் செய்க.


'சேணோக்கி நந்துநீர்கொண்டதே போன்று' என்பது பழமொழி.

பாடல்-70


சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.

 தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்!,  ஆராய்ந்தால்,  புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்),அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட,  அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.

(க-து.) அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையே மிகச் சிறந்தது.


'மோரின் முதுநெய் தீது ஆகலோ இல்' என்பது பழமொழி.

Saturday, November 29, 2014

பழமொழி நானூறு- பாடல் 61 முதல் 65 வரை



பாடல்-61

உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

 குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர்,  வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும்,  கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல், தாமுங் கருதாமல்,  நூல்களை,  நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், கேட்டலே நன்று - (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று.

கற்றலிற் கேட்டலே இனிது

பாடல்-62



கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.

 சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை, வேண்டினும் வேண்டாவிடினும்   அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள் வந்தே தீரும்.,

தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும்.

(கழுமலம் : இது சோழநாட்டுள்ள தோரூர். கருவூர் : இது சேரநாட்டுள்ளதோரூர். இவ்விரண்டும் இடைபடச் சேயவாயினும் ஊழ் கருவூரிலுள்ளவனை அரசனாக்கியது. 'விழுமியோன்' என்றது. பின்னர் 'இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டியவன்)

'உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.

பாடல்-63


எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ தில்.

பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே!,  (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து,  குறுநிலத்தை ஆளுமரசன்,  எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல),  துன்பமே துணையாக, தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி, இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல்வேண்டும்.)


'குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வ தில்' என்பது பழமொழி.

பாடல்-64


கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய்
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.

 நற்குணமுடைய பெண்ணே!,  தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை, தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்), கல்வியறிவு உடைய ஒருவனுக்கு, நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்;  கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.

( கற்றார் அறிவுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும்.)


(1). 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை'
(2) 'ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை  பழமொழிகள்.


பாடல்-65

வென்றடு கிற்பாரை வெப்பித் தவர்காய்வ(து)
ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல்
குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்
நன்றொடு வந்ததொன் றன்று.

 குவடுகளோடு தேனொழுக்குகள் மாறுபட்டுக் கலாம் விளைக்கும் மலை நாட்டை உடையவனே!  தம்மைக்கொல்ல வல்லவர்களை,  கொதிப்பிக்கச் செய்து,  அவர் காய்வதாகிய ஒரு செயலின் கண்ணே நின்று,  வலிமையாலும் அறிவாலும் சிறியவர்கள், அவர்க்கு மாறுபட்ட பலவற்றைச் செய்தல்,  அச் செயல்,  மிகவும் நல்ல காலத்திற்குத் தனக்கு வந்ததொரு செயலன்று.

(வலியார்க்கு மாறுபட்டு நின்று அறிவிலார் செய்வன அவர்க்கே தீங்கினை விளைவிக்கும்)



'அது பெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று' என்பது பழமொழி.

Friday, November 28, 2014

பழமொழி நானூறு- பாடல் 56 முதல் 60 வரை



பாடல்-56

எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம்.

 எமக்கு ஓர் துன்பம் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து,தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டாம், பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ?, இல்லை . துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை,  தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.

(க-து.) நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொள்ள வேண்டும்.


'தமக்கு மருத்துவர் தாம்' என்பது பழமொழி

பாடல்-57


கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்
கடம்பெற்றான் பெற்றான் குடம்.

மடப்பம் பொருந்திய மான்போன்ற பார்வையையுடைய,  சிறந்த மயில் போல்வாய்!,  மெய்யான நெறியிலே நின்று உலக இயலை அறிந்தார்,
 உண்மையாகவே, யாதொரு கரியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள், மீட்டுத் தன் கையின்கண் வருதல் இல்லை என்று கூறுவார்கள்.  பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான்,  உறுதி கூறுதற்குப் பாம்புக் குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால்.

(க-து.)யாதொரு சான்றுமின்றிக் கடன் கொடுத்தலாகாது.

 '(குடம்பெற்றான்' என்றது பண்டைநாளில் வழக்கினைத் தீர்ப்போர் சான்றில்லாதாரைப் பாம்புக் குடத்தின்கண் கையைவிட்டு அவர் வழக்கினைக் கூறுமாறு செய்வர். இது பண்டைய நாளில் தீர்ப்புக் கூறப்பட்ட முறை.)

'கடம் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி.

பாடல்-58


நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல்.

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே, குரங்கினங்களுள், நல்ல முகத்தை உடையவை,  இல்லை; (அதுபோல) பெருகி வழிவழியாகவந்த, தீயகுணமுடையாரெல்லாருள்ளும்,  பெருக ஆராய்ந்து,  ஒருவரைத் தேறும்பொழுது,  நல்ல குணமுடையார், காணப்படார்.

(க-து.)கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார்.


'குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.

பாடல்-59


முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்.

மொட்டுக்கள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே!,  குறைவின்றி ஒருவர் செல்வமுடையராய பொழுதின்கண், சமைத்த உணவினை,  உண்ணவருவோர் ஆயிரம் பேர் உளராவர், கலியுகமாகிய காலத்தில், செல்வம் இல்லாதவர்க்கு,  நட்பினர் ஒருவரும்இலர்.

(க-து.) ஒருவன் செல்வமுடையனாய காலத்து அவனைச் சூழ்ந்து நிற்பதும், அஃதிலனாய காலத்துப் பிரிந்து நிற்பதும்கீழ்மக்களது இயல்பாகும்.


'கெட்டார்க்கு நட்டாரோ இல்' என்பது பழமொழி.

பாடல்-60


ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

 மிகவும் வழியைக் கடக்கவிட்டு,  தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை, ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல), கல்வியைக் கற்றற்குரிய இளமையில்,  கல்லாதவன், முதுமையின்கண் கற்று வல்லவனாவான்,  என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

(க-து.) கற்றற்குரிய இளமைப் பருவம் கழிவதற்கு முன்னே கல்வி கற்கவேண்டும்.



(1) 'சுரம்போக்கி உல்கு கொண்டார்இல்லை.'
(2) 'மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை' 

Thursday, November 20, 2014

பழமொழி நானூறு - 51 முதல் 55 வரை



பாடல்-51

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

 இயல்பாக வுள்ள (தனது) பகையை வெல்ல நினைப்பவன்,  தனக்கு அரணாகுமாறு,  முன்னரே (தன் பகைக்கு) மற்றொருவனைப் பகைவனாகுமாறு தூண்டுதல் செய்து,  ஒரு நெறியால்,  கோபத்தின்கண் மிக்கொழுகித் தன் கைக்கு எளிதாமாறு பகையை நெருக்குக,  அச் செயல், பெரிய குரங்கு சிறிய குரங்கின் கையால் துழாவியசெயலை ஒக்கும்.

(க-து.) பகைவரை அவர்க்கு மாறாக மற்றொருவரை உண்டாக்கி வெல்க என்றது இது.

'சிறு குரங்கின் கையாற் றுழா' என்பது பழமொழி.

பாடல்-52

பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோ(டு)
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோ டாடார் கவறு.
 பாரதநூலுள்ளும்,  பந்தயப் பொருள் தம்முடைய தாயப்பொருளாகக் கொண்டு,  நூற்றுவரும்,  ஐவரோடும் சூதுப்போர் செய்து,  (அது காரணமாகப்) பகைவராகி இடைக்காலத்திலேயே தம்முயிரை நீக்கிக்கொண்டார்களென்றும் கேட்கப்படுதலால், அன்புடையவரோடு விளையாட்டாகவாயினும் சூதாடுதலிலர் அறிவுடையார்.

(க-து.) சூதாடல் உயிர்க்கிறுதியைத் தருவதாம்.


'காதலோ டாடார் கவறு' என்பது பழமொழி.

பாடல்-53

அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து.

 ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால்,  அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள்,  நல்ல செயல் முறையான் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அச்செயல், இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினையொக்கும்அல்லலுற்றார்க்கு
(க-து.) அல்லலுற்ற காலத்துஅவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.

'மனை மர மாய மருந்து' என்பது பழமொழி.

பாடல்-54

தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு
உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முட்களையு மாறு.

 ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார்,  தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்; மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்;  உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல்,  முள்ளினால் முள்ளைக்
களைதலையொக்குமன்றோ?

(க-து.) பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலா மென்றது இது.


'முள்ளினால் முட்களையு மாறு' என்பது பழமொழி.

பாடல்-55

 ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

 மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார்,  அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை, அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா,  அவ்வறிவுடையோர் நாடுகளேயாம்,  அங்ஙனமானால்,  வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.

(க-து.) கற்றாருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.

Sunday, November 16, 2014

பழமொழி நானூறு - பாடல் 36 முதல் 50 வரை



36. ஆராய்ந்த பின் நம்புங்கள்

     தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடத்தினும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி நம்பிக்கை கொண்டவன், உறுதியாகக் கெட்டே போவான். அப்படியிருக்க, 'எப்பொழுதும் வெகுண்டவர்களைப் போல, மனம் வேறுபட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டாம்' என்று, கொஞ்சமும் சொல்ல வேண்டாம் அல்லவோ?

விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்'.

      'ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்' என்பது பழமொழி.

37. ஏவியது செய்யாத ஊழியர்

     'எம்மவராதலாலே நீவிர் இக்காரியத்தை எமக்குச் செய்து தருவீராக' என்று வேந்தன் தன்னுடைய சுற்றத்தார்களை நம்பி நியமித்த இடத்து, அக்காரியத்தைச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட அச்சுற்றத்தினர், அம்மன்னனுக்காக வேல் முனையிலேயாயினும் வீழ்ந்து அதனை எப்படியாயினும் நிறைவேற்ற வேண்டும். அப்படியல்லாமல், அந்தக் காரியத்தை வேண்டாமென மறுத்துச் சொல்வார்களானால், 'ஆல்' என்று சொல்லப் 'பூல்' என்று மறுத்துச் சொல்வது போன்றதே அதுவாகும்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.

    'ஆல் என்னிற் பூலென்னுமாறு' என்பது பழமொழி.

38. பனைபோலச் செய்யும் உதவி

     பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தை உடையவனே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக்கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காதவர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும்.

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து'.

      'ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து' என்பது பழமொழி.

39. எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும்

     தம்முடைய குடிப்பிறப்பினாலே பொல்லாத தன்மையை உடையவர்கள்; எத்தகைய துணைவலிமையும் இல்லாதவர்கள்; மிகவும் வறுமைப்பட்டிருப்பவர்கள்; பதில் கூறும் சொற்களினாலே தம் பகைவரைப் போன்றிருக்கிறார்கள் என்று, வலியவர் ஒருவர் அவரை அலைக்கழித்த காலத்திலே, அந்தத் துயரத்தைப் பொறுக்க மாட்டாது வலியற்றவரான அவர்கள் அழுத கண்ணீர் ஆகிய அவையே அப்படி ஆட்டுவித்தவர்களுக்கு எமனாகி, அவர்களை அழித்துவிடும்.

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'.

 'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்' என்பது பழமொழி.

40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்

     கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை அல்லவா!

ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.

     கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம். எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம்.



41. பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல்

     'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்'.

     பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்பது பழமொழி.

42. அறத்தைப் பாதியிலே நிறுத்தக் கூடாது

     நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல், ஒரு கட்டுக்கோப்பு உடையதாகவே செய்து வருவானாக. இடையில், அது இடையூறு உடையதாகி, அதனால் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிடப், பயிரை நட்டுவிட்டுக் காத்து விளையவைத்து அறுத்துப் பயன் பெறாமற் போயினவனாதலை விட நடாமலிருப்பவனாயிருத்தலே நல்லதாகும்.

பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'.

     அறம் செய்பவர், குறுக்கிடும் இடர்ப்பாடுகளைக் கருதி, இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது. தொடங்கியதை முற்றவும் செய்து பயன்பெறுதல் வேண்டும். 'இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்பது பழமொழி.

43. பகைவரின் துணைவரை நட்பாக்கிக் கொள்க

     "யானும் இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை" இப்படிச் சொல்லி, அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளுமாறு, பகைவரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும்.

யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.

     பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உறவாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. 'இடைநாயிற்கு' - கிடை நாயிற்கு என்றும் பாடம். 'இடை நாயிற்கு என்பு இடுமாறு' என்பது பழமொழி. என்பு பெற்ற நாய் கள்ளற்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறி விடுவர் என்பதாம்.

44. இல்லாததைத் தருவதாகச் சொல்ல வேண்டாம்

     வேலினது தன்மையைப் பெற்று, முற்றவும் அமர்ந்த கண்களையுடைய, பசிய வளையல்களை அணிந்தவளே! மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டும் என்று கூறும் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலே இல்லாத அப்பொருளைத் தன்னிடத்தே உடையதொன்றாகவும் அதனைத் தாம் தருபவராகவும் உறுதியாகக் கூறினால், அங்ஙனம் வீணே கூறுதல், இடையனால் வெட்டப்பட்ட மரத்தினைப் போன்றதாகும்.

அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.

     இடையன் கொஞ்சங் கொஞ்சமாகக் கிளையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுகிறான். அது போலவே, இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும், கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். 'இடையன் எறிந்த மரம்' என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி.

45. கொடுப்பவனும் கொடுக்க மாட்டான்

     தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொருளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் தன்னால் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்தேயுள்ள அப்பொருளை ஒளித்து வைத்து இல்லையென்று மறைப்பான். அதனால், யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும்.

மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
'இரந்தூட்குப் பன்மையோ தீது'.

     இரந்து உண்ணுதலுக்குப் பலராகச் செல்லுதல் கூடாது. 'இரந்து ஊட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி. கொடுக்க நினைப்பவனையும் கொடுக்க விடாது செய்து விடும் என்பது இதன் கருத்தாகும்.

46. வாழ்விலே உறுதி வேண்டும்

     இல்லற வாழ்க்கையானாலும், அஃதில்லாத துறவற வாழ்க்கையானாலும் தாம் உறுதியாக இரண்டிலொன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகிச் சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்துப் போக, நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள். அவர்களே, காவடியின் இரு பக்கத்திலுள்ள பொருள்களையும் நீக்கிவிட்டுத் தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர்களுக்குச் சமானமாவார்கள்.

இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
'இருதலையும் காக்கழித் தார்'.

     இருவகை வாழ்க்கையினும் எதன்பாலும் முறையே ஈடுபட்டு நிலைத்து வாழாது வாழ்நாட்களைக் கழிப்பவர், பயனற்று வாழ்ந்தவராவர். 'இருதலையும் காக் கழித்தார்' என்பது பழமொழி. இருபக்கமும் சுமையைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்ல உதவுவது காவடித் தண்டு. சுமைகளை அகற்றிவிட்டு வெறுந்தண்டைச் சுமந்து போவது நகைப்பிற்கே இடமாகும்.

47. போலி நண்பர்கள் கேடு செய்வார்கள்

     தம்மிடத்திலே மிகுதியாக நட்புப் பூண்டவர்களுக்கும், அவர்களுடைய பகைவர்களுக்கும் இடையே சென்று, இருவரிடத்தும் மன வேறுபாடு இல்லாமல் மிகவும் நட்புடையவர்கள் போலவே பேசிப் பழகி, அவர்களுள் ஒருவருடன் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர், மிகவும் கெட்டவர்கள். அவர்களே, இருதலைக் கொள்ளி என்று சொல்லப்படுபவராவர்.

பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.

     இருவரது பகைமையும் வளர, இருவராலும் இருவருக்கும் கேடே விளைதலால், 'இருதலைக் கொள்ளி' போன்றவராயினர் அவர் என்க. 'இருதலைக் கொள்ளி என்பார்' என்பது பழமொழி. சமாதானம் செய்ய முயல்பவர் இருவருக்கும் பகையாதலும் கூடும் என்பது கருத்து.

48. அச்சம் உள்ளவனுக்குப் பாதுகாப்பே இல்லை

     கோட்டை வாயிலை அடைத்து வைத்துப் பாதுகாவல் பெற்றுக் கோட்டையினுள்ளே இருந்தாலும் போருக்கு ஆற்றாது அச்சங்கொண்டு உள்ளே புகுந்திருப்பவர், அந்த அச்சத்தின் காரணமாகவே பகைவர்களிடம் எளிதாக அகப்பட்டு விடுவார்கள். பயந்து, இருளினிடத்தே போய் இருந்தாலும், பறவையானது, அது உண்மையாகவே இருளினையுடைய இரவாயிருந்தாலுங் கூட, அதனைப் பகலென நினைத்தே அஞ்சும்.

இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.

     உள்ளத்திலே, அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. 'இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம்.

49. வாய்ப் பேச்சு வீரர்கள்

     நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவையினைக் கண்டால் தம் நாவைச் சுழட்டி வைத்துக் கொண்டு, நன்மையானவைகளை உணராத புல்லர்களின் கூட்டத்திலே, நம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுதல், பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப்பட்ட பானை சட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவது போன்றதாகும்.

நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்'.

     இடைக்கலம் - கருங்கலம்; பானை சட்டிகள்; புல்லார் - பகைவர். 'இல்லுள் வில்லேற்றி இடைக் கலத்து எய்துவிடல்' என்பது பழமொழி. இப்படிச் செய்வது புல்லறிவாண்மை என்பது கருத்து.

50. நல்ல விதி இருப்பவன் சிறப்பு அடைவான்

     பகைவர் இட்ட நெருப்பினாலே காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்ற பராந்தகச் சோழனின் மகனாகிய கரிகால் வளவனும், இரும்பிடர்த்தலையார் என்னும் பெயரையுடையவரைத் தனக்குத் துணையாகப் பெற்று, பின் காலத்திலே தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத்தினான். அதனால் உயிருடையவர் முயன்றால் அடையா தொழில் எதுவுமில்லை என்றறிக.

சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் 'இல்லை
உயிருடையார் எய்தா வினை.'

     முயற்சியுடையார் தம் உயிரைக் காத்துக் கொண்டால், என்றேனும் நல்வாழ்வு பெற்றே தீர்வர் என்பதாம். 'இல்லை உயிருடையார் எய்தா வினை' என்பது பழமொழி. எனவே, உயிரைக் காத்துக் கொண்டு ஆகும் காலத்தை எதிர்நோக்கிச் செயலாற்ற வேண்டும் என்பது கருத்து.

Saturday, November 15, 2014

பழமொழி நானூறு- பாடல் 26 முதல் 35 வரை



26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள்

     நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கியிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந்திருக்கும் பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக.

பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.

 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்பது பழமொழி.

27. பேதை எதையும் செய்யமாட்டான்

     தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும், இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமையையே தன் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியுடையவன் ஆகவே மாட்டான். 'வெற்றி பெறல்' என்பது, ஊழ்வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சியினாலே மட்டும் அடையக் கூடியதன்று' என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும்.

உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை, - 'தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால், பூணாது' என் றெண்ணி,
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.

. 'அறிவச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.

28. ஊழ்வினையால் அமைவதே செயல்

     மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதனால் என்க. அதனால் அவருடைய நல்ல அறிவினையும் கூட ஊழ்வினை கெடுத்துவிடும் என்று அறிதல் வேண்டும்.

சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
'அறிவினை ஊழே அடும்'.

     மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' - விருத்தம் என்றும் பாடபேதம்.
 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதும் ஒரு பழமொழியாகக் கருதலாம்.

29. வல்லவன் காரியம் கெடாது

     நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்ததாகிய, பயனில்லாமல் சேர்ந்து கிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச்செல்வமும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும்.

பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
'குளநெடிது கொண்டது நீர்?'.

 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.

30. வருவாய் உடைய செல்வம்

     விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல் நீர் முழுவதும் வற்றி விடுமோ? வற்றாது! அதுபோலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும், வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்து போவதில்லை.

களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா; - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'.

. 'அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்' என்பது பழமொழி.

31. ஊழ்வினைதான் காரணம்

     ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலை நாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வதொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு, அதனைப் போகாமல் நிலை நிறுத்தச் செய்யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலையெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை என்பதை அறிவாயாக.

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.

 'ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி.



32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை

     தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டு விடாதிருப்பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டும் பிறிதொன்றாக ஆக மாட்டாதல்லவா?

ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும்; 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.

 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பதை நினைக்க. 'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்பது பழமொழி.

33. கொடியவன் செய்வது செயலாகாது

     வலிமையானது நிலையாகத் தங்கியிருத்தலையுடைய, மலை போன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கணக்கு ஆகுமோ! அது போலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது.

தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் க 'ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு' என்பது பழமொழி.

34. பொய்யைப் போக்கும் வழி

     ஒரு பொருளை மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன், பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள். அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள், குறளையைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க் காலைப் போலத் தாமும் குறளை பேசி ஆடவே மாட்டார்கள்.

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து
ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

     'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி.

35. மக்களிடம் அன்பு

     குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடிமக்களிடத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்து வந்தான் என்றால், அவனைக் கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன செய்துவிட முடியும்? ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது போல. அவ்வேந்தன் ஒருவனே, அப் பகைவர்கள் அனைவரையும் தோற்று ஓடச் செய்து விடுபவனாவான்.

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.

Friday, November 14, 2014

பழமொழி நானூறு- பாடல் 16 முதல் 25 வரை



16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது

     காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டே தான் பிளக்கலாம். அதைப் போலவே நல்லவர்களின் நல்ல தன்மையை உணர வேண்டுமானால் அவர்களை விட, நல்லவர்களே அதனை முறையாக உணரக் கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.

     'வயிரத்தைக் கொண்டுதான் வயிரத்தை அறுக்க வேண்டும்' என்று வழங்கும் பழமொழியையும் நினைக்க. நல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி, நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத்தப்பட்டது.
'அயிலாலே போழ்ப அயில்' என்பது பழமொழி.

17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்!

     மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம். அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன், அதனைச் செய்யப் புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மையாகும்.

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு,
கரையிருந் தார்க்கெளிய போர்'.

'அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்' என்பது பழமொழி.

18. பகையை அறவே ஒழிக்க வேண்டும்

     தம்முடன் மனம் ஒத்துப் போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதியடைந்து இருந்து விடக் கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்து போக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங்கொள்ளுதலே மன்னரின் இயல்பு. அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக்குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும்.

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு'.

     தாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான்
 'அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு' என்பது பழமொழி.

19. மூடர்களின் உறவு கூடவே கூடாது

     பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்டமாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலை பெற்றிருப்பவர்கள், நுண்ணறிவு இல்லாதவர்களின் இடையிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள்.

தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.

. 'அரிவாரைக் காட்டார் நரி' என்பது அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும்.இதுவே பழமொழி



20. ஈகையே செல்வத்திற்கு அழகு

     முழவுகளின் ஒலி போல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள். அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப் போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். 'இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட்டும்' என்று ஒரு பொருளை யேனும் மனதாரக் கொடுத்து மகிழாதவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும்.

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
'அழகொடு கண்ணின் இழவு'.

 'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.

21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார்

     அடுக்கடுக்காக விளங்கும் மலைத் தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! மணிகளின் இயல்புகளை உணர்பவர்களுக்கு, அவை சேறாகி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை அவர்களுக்கு என்னவிதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள்.

இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
உணர்பவர் அஃதே உணர்ப; - உணர்வார்க்கு
அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.

 'அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.

22. உறவாடும் பகைவரை ஒதுக்கிவிட வேண்டும்

     பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.

வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.

" கடன். 'அள்ளில்லத்து உண்ட தனிசு' என்பது பழமொழி.

23. தருமம் செய்யப் பாவம் போகும்

     செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ் செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண்டாகும்.

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'.

 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.

24. அவன் மயக்கம் தெளியவில்லை!

     தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை, நீ அவன் பாற் சொல்லாதிருப்பாயாக. பாணனே! பொய்த்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல் என்பது எவருக்குமே முடியாத செயலாகும்.

தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.

 'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி.

25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல்

     செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.

 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது.

Thursday, November 13, 2014

பழமொழி நானூறு - பாடல் 6 முதல் 15 வரை


6. தருமம் செய்யுங்கள்

     தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'.

. 'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.

7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது!

     வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து அவரைப் புகழிலே நிலை பெறுத்துதல் எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கம் சோலைகளையுடைய மலை நாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக.

வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

 'அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.



8. குடிப் பெருமையின் சிறப்பு

     தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமையாகக் கூறும் தற்புகழ்ச்சியாளர்களைப் பிறரும் புகழ்தல், புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று என்றாலும், அது, அடுப்பின் ஓரத்தில் முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியே யாகும்.

தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.

 'அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி.

9. மகனுக்குச் செய்ய வேண்டியது

     ஒரு தகப்பன், எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமானது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும் போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள்.

எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.

 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது இதிலுள்ள பழமொழி.

10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

     மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரேயானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா?

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'.

 'அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி.

11. அறிவு ஆடை போன்றது!

     அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா?

அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.

 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது பழமொழி.

12. வம்புக்காரனின் வாய்

     நன்மை தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களுடைய திறமையில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற்காக வருத்தப்படாதவர் போல, அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள். பிறர் மீது இரக்கம் இல்லாது பழிதூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள்.

தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க! - பரிவுஇல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

   'அம்பலம் தாழ் கூட்டுவார்' என்பது பழமொழி.

13. அன்பால் சாதிக்க வேண்டும்

     அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ஙனமில்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது கறந்து கொள்ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும் ஆகும்.

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

 'அம்பு விட்டு ஆக்கறக்குமாறு' என்பது பழமொழி.

14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம்

     கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியலை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.

முயலலோ வேண்டா; முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

 'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.

15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது

     இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரனே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப்படும் அயிரையாகிய சிறுமீனைத் தூண்டிலிலே கோத்துவிட்டுப், பெரிய மீனாகிய வராலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே யாவர்.

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ
விராஅம் புனலூர! வேண்(டு); 'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.

 'அயிரை விட்டு வரால் வாங்குபவர்' என்பது பழமொழி.

பழமொழி நானூறு - பாடல் 2 முதல் 5 வரை


2. மேல்நிலை அடைதல்

     மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.

மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்
அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.

     பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி.

3. அறநெறியாளனுக்கு உபதேசம்

     மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும்பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙனமானால், 'பல திறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையாற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையினைப் போன்றதேயாகும்.

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
'மிக்க வகையால் அறஞ்செய்க!' எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.

     பாலில் சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால் அவன் மேலும் சிறப்பே அடைவான். 'அக்காரம் பால் செருக்கும் ஆறு' என்பது பழமொழி.

4. தளராதவன் செல்வனாவான்

     ஒருவனிடம் உள்ளது, அவனுடைய உள்ளூர்க்காரர்கள் மிகச் சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி, அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவார மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவா?

உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'.

     கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். 'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு' என்பது பழமொழி.

5. கொடியவன் பார்க்க மாட்டான்

     பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களில் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அது கண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அது போலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலுங் கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள்.

கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.

     கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்' என்பது பழமொழி.

Wednesday, November 12, 2014

பழமொழி நானூறு துவக்க உரை



பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.

பழமொழி என்றால் என்ன?

     பழம் தின்னச் சுவைப்பது; உண்பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது. இவ்வாறே கேள்விக்கு இனிதாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் விளங்கும் அரிய வாக்குகளையே, 'பழமொழிகள்' என்கிறோம்.

     நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும் போது, நினைவிற் கொள்ள வேண்டிய ஓர் உண்மை இதுவாகும்.

     இனிப் பழையவர்களான நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி, காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்து வரும், 'பழைய வாக்குகள்' என்றும் பழமொழிகளைக் கூறலாம்.
.
 பழமொழிக்கு 'முதுமொழி' என்றும் ஒரு பெயர்.

தற்சிறப்புப் பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.

(அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார்.
இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன)

பாடல்-1



அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.

காமம்,வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் அருமைகாக கெடுத்தலான்.குற்றமின்றி முற்றும் அறிந்த கடவுளின் திருவடிகளையே அகன்ற கடலால் சூழப்பெற்ற அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில் உரிமைப் பொருளைப் போலக் கருதி அறிந்தவர்களது உயர்வே பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரிது

(கருத்து- கடவுளின் திருவடிகளை உரிமையாக வணங்கியவர்களது உயர்வே மிகச்சிறந்தது.)

நாலடியார் - 40.காம நுதலியல்-391 முதல் 400 வரை



பாடல்-391

முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம்.

பாடல்-392

தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

தம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை, உடம்பு பூரிக்கத் தழுவும், அத் தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை சாப்பறையை ஒத்திருந்தது. (பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தது).

பாடல்-393


கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும் வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து வைக்கும் மயக்கம் பொருந்திய மாலைக் காலத்தில், மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாகத் தொடுத்து, அம்மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, தலைவன் இல்லாத மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைத் தரும் என் மனம் கலங்கி அழுதாள்.

பாடல்-394


செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.

சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கண்டு வருந்தி, செவ்விரலால் பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் முறையாக எடுத்தெறிந்து விம்மி அழுது, தனது மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிட்டு, படுக்கையில் தனது தோளையே தலையணையாகக் கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ? (வினை முடித்து மீண்ட தலைவன் பாகன் கேட்பக் கூறியது).

பாடல்-395


கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.

சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டு விட்டது.

பாடல்-396

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.

செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது).

பாடல்-397


ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.

ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள். (தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப நிலையைத் தோழி கூறியது).

பாடல்-398


கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

ஒளி பொருந்திய வளையலையுடையளே! 'கடந்து போதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நாளை நடந்து செல்லும் ஆற்றல் உடையையோ?' என்று தானே கேட்கின்றாய்? ஒருவன் ஒரு குதிரையை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் முறையையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன்பின் செல்லுதல் அரிதன்று. (தலைவனுடன் போகச் சம்மதித்த தலைவி தோழிக்குக் கூறியது).

பாடல்-399


முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி. 399

மார்பகமும், முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது).

பாடல்-400


கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற மர்பகத்தையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது). 

Tuesday, November 11, 2014

நாலடியார் - 39.கற்புடை மகளிர்- 381 முதல் 390 வரை



பாடல்-381


அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை. 381

பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் பிறர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மனைவி ஆவாள்.

பாடல்-382


குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.

பாடல்-383

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும்.

பாடல்-384


கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கரித்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள்.

பாடல்-385


எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ?

பாடல்-386

ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.

பாடல்-387


கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.

ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம்! அது போல, முழுதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலை போன்ற மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் உடையவர் கற்புடை மகளிர்).

பாடல்-388


கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.

பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவா¢ன் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).

பாடல்-389


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இப்போது, தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் யானே! (தம் கணவர் பரத்தையரைக் கூடிய போதும் கற்புடை மகளிர் பொறுத்திருக்கும் இயல்பினர் என்பது கருத்து).


பாடல்-390

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.

பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். )

Monday, November 10, 2014

நாலடியார் - 38.பொது மகளிர்-371 முதல் 380வரை



பாடல்-371

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.

பாடல்-372


அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

”அழகிய  பொதுமகள் ஒருத்தி, என்னிடம் செல்வம் மிகுதியாய் இருந்தபோது, அன்பால் ஒன்றுபட்டு ஒரு கணமும் என்னைப் பிரிய விரும்பாதவள் போல, அவசியமானால் ‘நாம் மலைமீதேறிக் குதிப்போம்’ என்றாள். செல்வம் எல்லாம் வற்றிப்போன பின், காலில் வாதநோய் வந்துவிட்டது என்றழுது நடித்து, என்னுடன் மலையுச்சிக்கு வாராமல் விலகிச் சென்றாள்.”

பாடல்-373


அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.

அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.

பாடல்-374


ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.

அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர்.

பாடல்-375


பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.

இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்).

பாடல்-376


பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.

நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!

பாடல்-377


ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.

காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர்.

பாடல்-378


ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.

தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.

பாடல்-379


ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.

ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! (உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்!

பாடல்-380


உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்

ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவரிடம் எல்லாம் ஆசையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார். 

Sunday, November 9, 2014

நாலடியார் - 37.பன்னெறி- 361 முதல் 370வரை



பாடல்-361

மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.

மேகம் தவழும் மாடி உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காக நின்று ஒளி வீசுவதாய் இருப்பினும், மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றிலாதவனுடைய இல்லம் என்ன பயனையுடையது? அது பார்க்கக் கூடாத சுடுகாடே ஆகும்.

பாடல்-362


வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

தளர்வில்லாத கொடிய வாள்வீரன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பொ¢தாம்!

பாடல்-363


எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கரிய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர்.

பாடல்-364


கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.

இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பெரியோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தெரிந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.

பாடல்-365


தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

(ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தெரிந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்

பாடல்-366


கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.

பாடல்-367


செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).

பாடல்-368


உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).

பாடல்-369


இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

மணிகளை வாரிக்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.

பாடல்-370


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும். 

Saturday, November 8, 2014

நாலடியார் - 36.கயமை-351 முதல் 360 வரை



பாடல்-351


ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

பாடல்-352


செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.

நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பாடல்-353


கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவனின் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?


கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

 பெண்தன்மையுடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).

பாடல்-355


தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.

பாடல்-356


மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

பாடல்-357


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு

பாடல்-358


ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).

பாடல்-359


இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).

பாடல்-360


நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பொ¢ய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது.