Friday, August 8, 2014

இன்னா நாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்: 31 (பண் அமையா...)

பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;

எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;

மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,

தண்மை இலாளர் பகை.


இசைக்க முடியாத யாழில் பாடுதல் துன்பமாம். சோதிடம் தெரியாதவர்கள் முகூர்த்தம் பார்த்தல் துன்பமாம். தாளம் இல்லாத மத்தளத்தின் ஓசை துன்பமாம். அவ்வாறே தன்மை இல்லாதவரது பகையானது துன்பமாம்.



பாடல்: 32 (தன்னைத் தான்...)

தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;

முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;

நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,

தொன்மை உடையார் கெடல்.



தன்னைத்தானே காத்துக்கொள்ளாது இருத்தல் மிகவும் துன்பமாம். முன்னே சொல்லாமல் பின்னால் பேசுபவர்களின் சொல் மிகவும் துன்பமாம். நல்ல குணமில்லாதவரது நட்பு துன்பமாம். அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்.



பாடல்: 33 (கள் உண்பான்...)
கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;

முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;

வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,

கள்ள மனத்தார் தொடர்பு.



கள் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முட்களையுடைய காட்டில் நடத்தல் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனத்தினை யுடையவரது தொடர்பு மிகவும் துன்பமாம்.



பாடல்: 34 (ஒழுக்கம்...)

ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;

விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;

இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,

கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு.



நல்ல ஒழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உள்ளதாகக் கூறுதல் துன்பமாம். சீரிய நூலினை விரும்பிக் கல்லாதார்க்குத் துன்பமாம். இழிவான தொழில் செய்பவனின் தொடர்பு துன்பமாம். நல்லவரால் விலக்கப்பட்ட இடத்தில் இருத்தல் துன்பமாம்.

பாடல்: 35 (எழிலி...)

எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;

குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;

குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,

அழகுடையான் பேதை எனல்.



மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். புல்லாங்குழலைப் போல இனிய மரத்தினது ஓசை துன்பமாம். (மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது தீப்பற்றிக்கொள்ளும்) குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம்.



பாடல்: 36 (பொருள் இலான்...)

பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;

நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;

வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,

கெடும் இடம் கைவிடுவார் நட்பு.


செல்வமில்லாதவன் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுதல் துன்பமாம். நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்தில் பொருள் இன்றி இருத்தல் மிகவும் துன்பமாகும். சென்ற வீட்டில் உள்ளவரை எதிர்பார்த்து உணவு உண்ணுதல் துன்பமாம். வறுமையுள்ள இடத்தில் கை விட்டு நீங்குவாரது நட்பு துன்பத்தைத் தரும்.



பாடல்: 37 (நறிய மலர்...)

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;

துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;

அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,

சிறியார் மேல் செற்றம் கொளல்.



வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும். கரையைத் தெரியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம். அறியாதவன் கற்றவர்களால் வினாப்படுதல் துன்பமாம். அவ்வாறே சிறியவர்கள் மீது கோபம் கொள்ளுதல் துன்பமாம்.

பாடல்: 38 (பிறன் மனையாள்...)

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;

மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;

வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,

திறன் இலான் செய்யும் வினை.



பிறன் மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாம். வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம். விரைந்து செல்லும் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமாம். செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம்.



பாடல்: 39 (கொடுக்கும்...)

கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;

கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;

கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,

மடுத்துழிப் பாடா விடல்.



பொருள் இல்லாதவனுடைய வள்ளன்மை துன்பமாம். கடிய பாக்கினுள் கல்படுதல் துன்பமாம். புலவனுக்குப் பரிசு கொடுக்காமை துன்பமாம். தடைப்பட்ட இடத்தில் பாடல் பாடாமல் விடுதல் துன்பமாம்.



பாடல்: 40 (அடக்கம் ...)

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;

தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;

அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா

அடக்க, அடங்காதார் சொல்.



அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம். முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம். பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம். அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.

கபிலர் பாடிய இன்னா நாற்பது முற்றும்

அடுத்து இனியவை நாற்பது  அடுத்த பதிவு முதல்.

No comments:

Post a Comment