நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல்.
விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே!, ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை,காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல், ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.
(க-து.) செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.
'நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்துவிடல்' என்பது பழமொழி.
பாடல்-82
பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்
பெரி(து)ஆள் பவனே பெரிது.
வில்லைப்போன்ற புருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்!, நன்மையையும், தீமையையும், நிரல்படப் புனைந்து, மருங்கு இருந்தார், சொற்களால் கூறவும் வேண்டுமோ?, எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.
(க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.
'பெரிதுஆள்பவனே பெரிது அறியும்' - இஃது பழமொழி.
பாடல்-83
உற்றதற்(கு) எல்லாம் உரம்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.
நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல், தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும், (அதுபோல்)கற்றறிந்தவர்கள், நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்யவேண்டுமோ? (வேண்டுவது இல்லை),தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.
(க-து.) கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமேஅழிந்தொழிதல் உறுதியாம்.
'நெல்செய்யப் புல்தேய்ந்தாற்போல நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்' என்பது பழமொழி.
பாடல்-84
இதுமன்னுந் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
தீநாள் திருவுடையார்க் கில்.
தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய, விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!, இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும், செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு), அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்), தீய நாட்கள், முன்செய்த நல்வினை உடையார்க்கு உண்டாதலில்லை.
(க-து.) ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்.
'தீ நாள் திருவுடையார்க் கில்' என்பது பழமொழி.
பாடல்-85
ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.
பொருந்திய அன்பினை உடைய உமையை, ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான், ஏற்றுக்கொண்டான், தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து, அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும், கொள்வார்கள்.
(க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.
நட்டாரை ஒட்டி யுழி.'
என்பது பழமொழி.
No comments:
Post a Comment