Thursday, December 18, 2014

பழமொழி நானூறு - 91 முதல் 95 வரை



பாடல்-91

பெருமலை நாட! பிறரறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று.

 பெரிய மலைநாட்டை உடையவனே!,  பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை, நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள்,  அரிய இரகசியத்தை,  நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல்,  பனையின் மீது பஞ்சினை வைத்து, கொட்டினாற் போலாம்.

(க-து.) அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக.அல்லாரிடத்துக் கூறற்க.


'பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டது' என்பது பழமொழி.

பாடல்-92

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.

 இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன்,  பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, பதவியை அடைந்தான், (ஆதலால்)  பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.

(க-து.) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன்பெறுவர் என்பதாம்.


'பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.

பாடல்-93


சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்.

அறிவு நிரம்பிய அமைச்சர்கள். மிகுதியானவைகளைக் கூறி இது பெருங்குற்றமல்லவென்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும்,  அன்றிரவு கழிந்த பின்னர், முன்னாள், பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்),  செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

(க-து.) முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம்.


'முறைமைக்கு மூப்பிளமை இல்' என்பது பழமொழி.

பாடல்-94

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர்.

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!,  நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும்,  (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள், நல்ல  குடியின்கட் பிறவாதார்,  (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி?,  யாவரே யாயினும்,  சொல்லின்கண் சோர்வுபடாதார்இலர்.

(க-து.) யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.

'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி


பாடல்-95

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.

தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; வாளாற் செத்துக, அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக,  மனம் பொருந்தி,  நுகத்தின்கண் நடுவு நிற்கும்பகலாணியை ஒப்ப,  ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

(க-து.) காய்த லுவத்த லின்றிஒழுகும் அமைதியே தவமாம்.


'நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.

No comments:

Post a Comment