Thursday, August 14, 2014

கார் நாற்பது - 1 முதல் 10 வரை




     அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார்.

(முதல் பாடல்)

(தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது)

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?


    கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 2

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!-
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.

     வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 3

(பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது)

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.


   வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.

பாடல் - 4

(தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது)

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!-
வாடும் பசலை மருந்து.



     கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.

பாடல் - 5

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு.


  அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பறக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.

பாடல் - 6

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;-
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று.

    மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.

பாடல் - 7

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!-
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை.

   தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.

பாடல் - 8

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்-
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு.

     பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.

பாடல் - 9

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.

     கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.

பாடல் - 10

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!-
மேனி தளிர்ப்ப, வரும்.


   என் தோழியே! வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.

No comments:

Post a Comment