Tuesday, August 19, 2014

கார்நாற்பது - 16 முதல் 20 வரை


பாடல் - 16

சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள.

பெரிய தோளினையுடையாய்! அசோகினது இளந்தளிர் போன்ற இன் உடம்பினது பசலையானது, மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் செயலற்று துன்பமுறவும் , பெரிய மயில்கள் களித்து ஆடவும்..பெரிய ஒலியையுடைய மேகங்கள் முழங்காமல் நிற்கும்.
(தலைவன் வருகைக் கண்டு தலைவி மகிழ்ச்சியை அடைய)



பாடல் - 17

அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.

பேதையே! மேகமானது கடல் நீரைக் குடித்து, பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புகளை வருத்தி பாறை கற்களையுடைய பக்க மலையின் மேல் நீரைச் சொரிந்து இருளை மிக்கது.(ஆதாலினால்) உனது நெற்றி பிறை மதியின் அழகை கொண்டதே!


.பாடல் - 18


கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.

மலைநெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் ,  வந்த பொழுதே மேகங்கள் மிக்க ஒலியையுடைய உருமேற்றுடனே நடுவு நின்று எங்கும் பெய்தலால் வறுமையுற்றார் உடம்புபோல முன்பு பொலிவிழந்த  காடுகள் பொருளுடையார் மனம் போல அழகைத் தந்தன.


பாடல் - 19


நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.

கலப்பைப்படை வெற்றியையுடையவனது வெண்ணிறம் போல பூங்கொம்பினையும், செவ்விய தாளினையுமுடைய வெண்கடம்புகள் மலர்ந்தன.ஆதலால்..என் மனம், பசுமையாகிய திரண்ட வளைகள் விளங்குகின்ற முன்னங்கையை உடையவளின் தோள்கள்  துணையாக வேண்டி நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது.

(கலப்பப்படை வென்றவன் - பலராமன்)



பாடல் - 20

வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.

சிறப்பமைந்த அரசனுடைய போர்த்தொழில்களும் முற்றுப் பெற்றன.செவ்வியினியவாயின மேகங்கள்.அரிய மணியையுடைய பாம்புகள் வருந்தும் வகை உருமேற்றுடனே போர்புரியும் வேந்தரின்சேனை போல் செல்லா நிற்கும் (ஆதலால் நாமே செல்லக்கடவேம்)

No comments:

Post a Comment