Friday, August 22, 2014

கார் நாற்பது - 26 முதல் 30 வரை


பாடல் - 26

.நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சில மொழி1
தூதொடு வந்த மழை.

சிலவாகிய மொழியினையுடையாய்..தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி இடமெல்லாம் பூத்தன.மழையும் தூதுடனே வந்தது.

(கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது)

பாடல் - 27

முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்1
பள்ளியுட் பாயும் பசப்பு.

மேகம் குறிஞ்சிப் பறைபோல முழங்குதலைச் செய்ய, காட்டில் குருக்கத்தியிலை விரிந்தன.(நம் காதலர்கள்) பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, நாம் ஊடுதலைப் பாராட்டுவதால் பசலை நோய் படுக்கையிடத்தில் பரவும்.

பாடல் - 28

இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்2
பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.

ஒலிக்கும் இசையினையுடைய வானம் முழங்குதலைச் செய்ய குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப்பட்ட குழை போல கொத்துக்களாய் தொங்க, மனமே ,,நம் காதலியின் ஊருக்கு அலர்கெடும் வகை நாம் செல்வதற்கு காடுகள் குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின.

(அலர் _ஊரார் கூறும் பழிசொல்)



பாடல்- 29

.

பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய சுரம்.

சோலைகளெல்லாம் பக்கங்களில் பூத்தன.காட்டின் கண்ணே தங்குதலின்றித் திரியும் அழகையுடைய வண்டுகள் இசைப்பாட்டைப் பாடா நின்றன.பகைத்தெழுந்த மேகம் எல்லாத் திசைகளிலும் வந்தது.காடுகளும் தட்பமுடையவாயின.(ஆதலால்)நாம் செல்லக் கடவேம்.



பாடல் - 30

.வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநற1
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து.

மலைகள் வளம் நிறைய வானம் சிறப்பெய்த பெரிய பூமியைய் துளிகளால் ஊடறுத்து இனிய மழை விழாமல் நிற்க, நறுமணம் கமழா நிற்க உதைக் காற்றனாது காதலியின் தலைவன் வரமாட்டான் என கருதி வருந்தியிருக்கும் அறியாமையை நமக்குத் தெரிவித்து, நறிய குளிர்ந்த சோலையில் அசையாமல் நிற்கும்.(ஆதலால்) நீ விரைவில் செல்வாயாக.

No comments:

Post a Comment