Wednesday, August 20, 2014

கார்நாற்பது - 21 முதல் 25



பாடல் - 21

 பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து.

எந்திரச் செய்கைகளான மாட்சிமைப் பட்ட ,அலங்கரிக்கப் பட்ட திண்ணிய தேர் வந்த வழியிதே! சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம் கூர்மையுற்று செவ்விய அழகிய நெற்றியையும், வளப்பான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும். சிலவாகிய மொழியினையுமுடைய மடவாளது வாயின்கண் உள்ள கூறிய பற்களை ஒவ்வா நிற்கும்.

பாடல் - 22

 இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு.

சேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க , தலையாட்டம் அணிந்து .புல்லினை உண்ட மனஞ்செருக்கிய குதிரையையும், தேருடன் பூட்டுதலைச் செய்ய .காடுகள் நற்குணமுடைய மகளிரின் இளமைச் செவ்விபோல அழகுற்று வருவாயுடையாரது செல்வம் போல பொலிவுற்றன.

பாடல் - 23

 கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை.

ஒள்ளிய வளையல்களை அணிந்தவளே! காடெங்கும் இடந்திரண்ட மேனி திரண்டமுத்தத்தை யொப்ப குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் மேகம் மழைபொழிந்து கொண்டு, அழகினையுடைய வானத்திடத்தையெல்லாம் கொண்டது



பாடல் - 24

 எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந் தோன்றும் பெயல்.

மலைகள் உயர்ந்த காடுகள் யானையின் மதம் நாறா நிற்கும், கரிய வானத்திங்கண் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும்.(ஆதலால்) பலவாகிய கரிய கூந்தலையுடையவள் ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்.மனமே! எல்லா தொழில்களும் ஒழிந்து நிற்க.நீ போதற்கு ஒருப்படு.


(பருவங்கண் டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது)

பாடல்- 25

 கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு.

குளிர்ச்சி மிக்க காட்டில், கரிய தாளினையுடைய வரகினது பொரியைப்போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன.(தலைவன்)செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்கு பசலை அதிகரித்தது.

No comments:

Post a Comment