Friday, August 8, 2014

இன்னா நாற்பது _ பாடல் 21 முதல் 30 வரை



பாடல்: 21 (ஈத்த...)

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;

மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,

ஓத்து இலாப் பார்ப்பான் உரை.


கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.

பாடல்: 22 (யானைஇல்...)

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர்.


யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.

பாடல்: 23 (சிறைஇல்லா...)

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;

அறை பறை அன்னார் சொல் இன்னா; இன்னா,

நிறை இலான் கொண்ட தவம்.


மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றோரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.

பாடல்: 24 (ஏமல் இல்...)

ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;

தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;

காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,

யாம் என்பவரோடு நட்பு.


காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.

பாடல்: 25 (நட்டார்...)

நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;

ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;

கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா

நட்ட கவற்றினால் சூது.


நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.

பாடல்: 26 (பெரியாரோடு...)

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;

'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,

பெரியார்க்குத் தீய செயல்.


பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.



பாடல்: 27 (பெருமை உடையாரைப்...)

பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;

கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;

வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,

இளமையுள் மூப்புப் புகல்.



பெருமையுடையோரை இகழ்ந்து கூறுதல் துன்பம். உரிமையுடையோரை நீக்கி விடுதல் துன்பமாம். செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம். இளமைப்பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் புகல் துன்பமாகும்.



பாடல்: 28 (கல்லாதான் ஊரும்...)

கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;

வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;

இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,

கல்லாதான் கோட்டி கொளல்.


குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் பேசும் நயமான பேச்சு துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.



பாடல்: 29 (குறி அறியான்...)

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;

தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;

அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,

செறிவு இலான் கேட்ட மறை.


பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.

பாடல்: 30 (நெடுமரம்...)

நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;

கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;

ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,

கடும் புலி வாழும் அதர்.


நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்.

No comments:

Post a Comment