Monday, August 11, 2014

இனியவை நாற்பது



பதினென்கீழ் கணக்கில் உள்ள 'நாற்பது" என முடியும் நான்கு நூல்களில்..இனியவை நாற்பது இரண்டாவதாகும்.இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகன் பூதஞ்சேந்தனார் எனப்படுபவர்.இவர் தந்தையார் மதுரை தமிழாசிரியர் பூதன் ஆவார்.இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்கமுள்ளவராய் இவர் இருக்க வேண்டும்.கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தையவர் என்பதோடு இன்னா நாற்பதின் பல கருத்துகளை அப்படியே எடுத்துத் தருவதால் அந்நூல் ஆசிரியருக்கு பிந்தையவர் என்பது சரியாகவே இருக்கலாம்.

இந்நூலில், கடவுள் வாழ்த்து நீங்களாக 40 செய்யுள்கள் உள்ளன.இந்நூலில் நான்கு இனிய பொருள்களைக் கூறும் பாடல்கள் நான்குதான்.அவை முதல்பாடல், மூன்றாம் பாடல்,நான்காம் பாடல், ஐந்தாம் பாடல்கள் ஆகும்.மற்றவை மூன்று இனிய பொருள்களையே சுட்டிக்காட்டுகிறது.

வாழ்வில் நன்மை தரும் கருத்துகளை சொல்வதால் இது 'இனியவை நாற்பது' எனப்பட்டது.

இனி பாடல்களைப் பார்க்கலாம்...முதல் பாடல் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

   பாடல்: 01

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.


பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.


பாடல்: 02
உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.


பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.

பாடல்: 03

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.


சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல்: 04

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு.

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

No comments:

Post a Comment