Monday, August 25, 2014

கார்நாற்பது - 36 முதல் 40வரை



பாடல் 36

சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

குளிர்ச்சிமிக்க செம்முல்லைப் பூக்கள் மீன் குத்திக் குருவியின் வாய் போலும் அழகுடையவனாகி வரிசை பொருந்த அரும்பின.(ஆதலினால் இப்போது)செல்வத்தையுடைய மழைபோல குளிர்ந்த மதர்த்த கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய காதலியது ஊரானது நமக்கு நல்ல விருந்தாகுமிடமாகட்டும்


பாடல் -37



கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்.

கரிய கடலின் நீரைக் குடித்த , நிறைந்த சூலினையுடைய மேகம் இரு பெரிய கற்களையுடைய பக்க மலையின் மேல் ஏறியிருந்து நீரைச் சொரியும் மிக்க செவ்வியையுடைய காலத்தும் அரசனது போர்த்தொழில் வாய்க்கப்பெற்ற நம் தலைவர் வாராதிருப்பாரோ!


பாடல் - 38

புகர்முகம் பூழிப்1 புரள வுயர்நிலைய2
வெஞ்சின் வேழம் பிடி யோ டிசைந்தாடுந்3
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒன்டொடி யூடு நிலை.

உயர்ந்த நிலையினையுடைய கடுங்கோபம் கொண்ட ஆண் யானைகள் புள்ளிமையுடைய முகம் புழுதியில் புரளும் வகையில் பெண் யானைகளுடன் கூடி விளையாடும் குளிர்ந்த செவ்வியையுடைய காலத்திலும் தலைவர் வரவில்லை (ஆதலால்) ஒள்ளிய தொடியினையுடையாளே அவருக்காக ஊடல் கொள்வதில் பயன் என்ன?


பாடல் - 39


அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

வண்டின் கண்ணினை ஒப்ப அரும்பினை ஈன்று, பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியினது பழைய தழையைச் சூடிக் கொண்டு , பெரிய புனங்களை உழவர் புதிதாக ஏர் விழுக்கத் தொடங்கினார்கள் (ஆதலால்) நம் ஊரின் கண் நம் தலைவர்க்கு பெரிய அலராயிற்று.



பாடல்-40.

வந்ததன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் 2கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.


மெல்லிய பேதையே!  தலைவர் செய்த குறிகள் வந்து விட்டன. அவர் வரமாட்டார் என வருத்தப்பட்ட ஒருத்தியாகிய உனக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி, அழகிய முகில் ஈந்தின் கனியின் நிறம் போல கொண்டது உன் நுதல் இனி ஒளி வரப் பெறும். (என தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறினாள்))




சிறப்புப் பாயிரம்

முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.


     முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.

No comments:

Post a Comment