Sunday, August 24, 2014

கார்நாற்பது - 31 முதல் 35 வரை



பாடல் 31

கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி.

உரை- எருமையினது எழுச்சியையுடைய ஆண் மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு போரின்கண் மறமிக்க வீரரைப்போல இறுமாந்திருக்கும் காலமே அழகிய நெற்றியுடையாளுக்கு நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்.(ஆகவே விரைந்து தேரைச் செலுத்துவாய்)

பாடல் - 32

கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு.

அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனதைப்போல , கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள் காட்டின்கண் பிடவமாகிய பெருந்தகையாளிடத்து நன்றாக இசைப்பாட்டினை பாடா நிற்கும்.பாகனே..மேகம் ஓடுதலைக் கண்டு தேரை விரைவாகச் செலுத்துவாயாக.

 (பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாட்டிசைப்பவர்கள் பரிசில் கருதிப் பாடுவது போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின எனப்பட்டது)

பாடல் - 33

கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்1
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட.

கடலினிது நீரை முகர்ந்த , நிறைந்த சூலினையுடைய மேகம், மேற்கு மலையிடத்து தான் கொண்ட நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினையுடைய மொழியை உடையவளது வருத்தம் நீங்க குறி செய்தேம்( ஆதலால் தேரினை விரந்து செலுத்துக)

பாடல் -34


விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணிந்த
ஒண்ணுதல் மாதர் திறத்து.

மிக்க பெருமையையுடைய மேகம் விரித்த அலையையுடைய கடலினிது நீரை நிறைய உண்டு பெரிய மலையை அடையா நிற்கும்.
மழை சூழ்ந்து கொள்ளும் கார் காலத்தை தெய்வ உத்தியென்னும் தலைக்கோலத்தை(ஒருவித தலையணி) அணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய காதலியினிடத்து (தான் மீண்டும் வரும் காலமாக) தலைவன் குறிப்பிட்டான்.


பாடல் - 35 .

சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு.

விதியினால் பிரிந்து சென்ற தலைவன் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென நினைத்து பசலை நோயுடனே , பலதுன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியினையுடைய மேகம் வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப்போல வானில் இருந்தும் இரங்கா நிற்கும்.

No comments:

Post a Comment