Thursday, November 6, 2014

நாலடியார் - பேதமை- பாடல் 331 முதல் 340 வரை



பாடல்-331


கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

கொல்லும் தொழிலில் வல்ல பெரிய எமன், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் நாளை எதிர் பார்த்திருக்க, அதனை உணராது இவ்வுலக வாழ்க்கையாகிய வலையில் இறுமாந்திருப்பவரது பெருமையானது, கொலைஞர் உலையிலே ஆமையை இட்டு நெருப்பை மூட்ட, அந்த ஆமையானது தனது நிலையை உணராது அந்த உலை நீரில் விளையாடுவது போலாம்.

பாடல்-332


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் குறைவற முடிக்கும் அறச் செயல்களைப் பற்றி யோசிப்போம் என்றிருப்போர் பெருமையானது, பெரிய கடலில் நீராடச் சென்றவர், அந்த கடலின் ஓசை ஒருசேர அடங்கிய பிறகு நீராடுவோம் என்று கருதியது போலாம். (குடும்பத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் முடிவில்லாதவை. ஆதலால் அறத்தைப் பிறகு செய்யலாம் என்றிருப்பது பேதைமை).

பாடல்-333


குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

நற்குலம், தவம், கல்வி, குடிப்பிறப்பு, முதுமை ஆகிய இவ்வைந்தும் ஒருவரிடம் தப்பாமல் பொருந்திய போதும், நன்மை மிகுந்த, குற்றமற்ற, பழைமையான சிறப்புடைய உலக இயல்பு அறியாதிருத்தல், நெய் இல்லாத பால் சோற்றுக்கு ஒப்பாகும். (சர்க்கரை முதலானவற்றைப் பெற்றாலும் நெய் கலந்தது போன்ற இனிமை பால் சோற்றுக்கு இல்லை. அதுபோல, கல்வி முதலான சிறப்புகள் இருந்தாலும், உலகத்தோடு ஒட்டி வாழாதார் வாழ்க்கை சிறப்பில்லாததாம்; பேதைமை உடைத்தாம்).

பாடல்-334


கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.

கற்கள் மிகவும் நல்லனவாகும். எப்படியெனில், பிறர் சொல்லும் சொல்லை அறிந்துகொள்ளாதவையானாலும், தம்மைச் சார்ந்தவர்க்கு அப்போதே நிற்பதும், உட்காருவதும், படுப்பதும், நடப்பதும் ஆகிய செயல்களுக்கு உதவுதலால், அவை யாருக்கும் ஓர் உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்.

பாடல்-335


பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.

தான் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லாத போதும், ஒரு பயனைப் பெற்றவன் போல், தன்னை எதிர்க்காதவரிடம் பகை கொண்டு சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காகக் கூறாவிடின் பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்றுவிடும். (ஒரு பயனுமின்றிப் பிறரைப் பழித்தல் பேதையர் தொழில் என்பது கருத்து)

பாடல்-336.


தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, 'அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்' என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.

பாடல்-337


ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

பாடல்-338


நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.

நாள்தோறும் நல்லோர் அவையை அடையார்; அறம் செய்யார்; இல்லாதவர்க்கு எதையும் தர மாட்டார்; எல்லா வகையிலும் இன்பம் அளிக்கத் தக்க மனைவியின் தோள்களைத் தழுவார்; புகழுடன் வாழார்; இப்படி ஒரு பயனும் இல்லாத பேதைகள் வாழ்க்கையில் வெறுப்படைய மாட்டார்களா? (மனைவியின் தோள்களைத் தழுவார் என்றதனால், பரத்தையின் தோள்களைத் தழுவுவர் என்று பொருளாயிற்று).

பாடல்-339


விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேச, 'நாம் இப்படிப்பட்ட புகழுரைகளை விரும்பமாட்டோம்' என்று வெறுத்துப் புறக்கணிக்கும் நற்குணமில்லாதவரிடம் கொள்ளும் நட்பானது, கடல் சூழ்ந்த உலகையே தருவதாயினும் துன்பம் தருவதாம். (தம்மை மதிப்பவரைத் தாம் மதியாதிருத்தல் பேதையின் இயல்பு).

பாடல்-340


கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.

ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).

No comments:

Post a Comment