Sunday, November 9, 2014

நாலடியார் - 37.பன்னெறி- 361 முதல் 370வரை



பாடல்-361

மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.

மேகம் தவழும் மாடி உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காக நின்று ஒளி வீசுவதாய் இருப்பினும், மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றிலாதவனுடைய இல்லம் என்ன பயனையுடையது? அது பார்க்கக் கூடாத சுடுகாடே ஆகும்.

பாடல்-362


வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

தளர்வில்லாத கொடிய வாள்வீரன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பொ¢தாம்!

பாடல்-363


எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கரிய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர்.

பாடல்-364


கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.

இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பெரியோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தெரிந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.

பாடல்-365


தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

(ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தெரிந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்

பாடல்-366


கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.

பாடல்-367


செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).

பாடல்-368


உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).

பாடல்-369


இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

மணிகளை வாரிக்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.

பாடல்-370


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும். 

No comments:

Post a Comment