Friday, November 7, 2014

நாலடியார்-கீழ்மை- 341 முதல் 350 வரை



பாடல்-341

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

நொய்யரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே வாயில் போட்டாலும், குப்பையைக் கிளறுதலை விட்டு விடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற்பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான்.

பாடல்-342


காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

உறுதியான நூற் பொருளைக் கற்றுக்கொள்ளக் குற்றமற்ற பெரியோரிடத்து, 'காலம் தாழ்த்தாது போகவேண்டும்' என்று ஒருவர் சொன்னால், கீழானவன், 'தூங்க வேண்டும்' என்று சொல்லி எழுந்து போவான். அல்லது வேறொரு காரணத்தைக் கூறி மறுத்துச் செல்வான்.

பாடல்-343


பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! மேலோர் மிக்க செல்வத்தை அடைந்தாலும் தம் ஒழுக்கத்தினின்றும் சிறிதும் குன்றாமல் ஒரே சீரான நிலையில் இருப்பர். கீழோர் செல்வம் பெற்றபோது, தாம் முன்னர் மேற்கொண்டிருந்த ஒழுக்கத்திற்கு வேறாக நடந்து கொள்வர்.

பாடல்-344


தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! ஒருவன் செய்த உதவி தினை அளவே இருக்குமாயினும் சான்றோர் அதனைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவர். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வில்லார், அதனை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.

பாடல்-345


பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.

பொன் கலத்தில் இட்டு நல்ல உணவினை உண்பித்தாலும் நாய், பிறர் எச்சில் சோற்றைக் கண் கொட்டாமல் பார்த்திருக்கும். அதுபோல, கீழான ஒருவனை மதித்து எவ்வளவுதான் பெருமை செய்தாலும், அவனது செயல்கள், அப்பெருமையினின்றும் முற்றிலும் வேறுபடும். (கீழ்மையுடையனவாகவே இருக்கும்).

பாடல்-346


சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

மேலோர், உலகமெங்கும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தக் கூடிய அரச செல்வத்தைப் பெறினும், ஒரு போதும் வரம்பு கடந்த சொற்களைச் கூறார். ஆனால் எப்போதேனும் முந்திரி என்னும் சிறு தொகையுடன், காணி என்னும் சிறுதொகை சேருமானால் ஒரு கீழ் மகன் தன்னை இந்திரனாகக் கருதி இறுமாந்திருப்பான்.

பாடல்-347


மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

குற்றமற்ற நல்ல பொன்னின் மீது, மாட்சிமை பொருந்திய நவமணிகளைப் பதித்துச் செய்யப்பட்டதானாலும் செருப்பு காலில் அணிதற்கே பயன்படும். அதுபோலக் கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும் கீழ் நிலையில் வைக்கத் தக்கவரேயன்றி மேல் நிலையில் வைக்கத் தகார்.

பாடல்-348


கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

சிறந்த மலைகள் விளங்கும் நல்ல நாட்டை உடைய அரசனே! கீழ் மகன் கடுமையான சொற்களைச் சொல் வல்லவன்; யாரிடமும் இரக்கம் இல்லாதவன்; பிறர் துன்பம் கண்டு மகிழ்பவன்; அடிக்கடி சினம் கொள்பவன்; எங்கும் திரிபவன்; யாரையும் பழிப்பவன்.

பாடல்-349


பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.

தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மலிந்து, ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய நாட்டு வேந்தனே! ஒருவர் தம் பின்னே நின்றால் 'இவர்கள் பலநாள் பழக்கம் உள்ளவர்கள்' என மேலோர் அவர்களிடம் இனியராய் இருப்பர். ஆனால் கீழ்மக்களோ அப்படி நிற்பவர்களை விரும்பாது பழிப்பர். (சில நாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய நண்பர்களைப் போலக் கருதுவர் மேலோர்; பலநாள் பழகியவரிடமும் அன்பு செலுத்தாது பழிப்பர் கீழோர்).

பாடல்-350


கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.

மன்னனே கேட்பாயாக! நாள்தோறும் அறுக்கத்தக்க புல்லை அறுத்துத் தின்பதற்குக் கொடுத்தாலும் சிறிய எருதுகள் பெரிய வண்டியை இழுக்கமாட்டா. அதுபோல, செல்வம் உடையவர்களானாலும் கீழ் மக்களை, அவர்கள் செய்யும் காரியத்தால், இவர்கள் கீழ் மக்கள் என்று அறிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment