Monday, October 13, 2014

நாலடியார் - 15.குடிப்பிறப்பு - பாடல் 141 முதல் 150 வரை



பாடல்-141

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.

பசித்துன்பம் மிகுதியாக வந்த போதும் சிங்கம் அருகம்புல்லைத் தின்னுமோ? (தின்னாது.) அதுபோல, உடை கிழிந்து, உடல்மெலிந்து, வறுமையுற்ற போதும் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

பாடல்-142


சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

மேகங்கள் தவழும், வானளாவிய மலைகளையுடைய மன்னனே! பெருந்தன்மை, மென்மை, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் மிகவும் உயர்ந்த குடியில் பிறந்தவரிடம் அல்லாமல், பெரும் செல்வம் உண்டான காலத்தும் பிறரிடம் உண்டாகமாட்டா.

பாடல்-143


இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று.

பெரியோர் வரக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர் சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், மற்ற உபசாரங்களைச் செய்தலும், அவர் பிரியும் போது சற்றுப் பின் செல்லுதலும் அவர் விடைதரத் திரும்பி வருதலும் ஆகிய நற்குணங்களை, உயர்குடிப் பிறந்தார் தமது அழியாத ஒழுக்கங்களாகக் கொண்டுள்ளனர். ஆனால் கீழ் மக்களிடம் இவற்றில் ஒன்றேனும் பொருந்தியிருக்கும் என எண்ணுதல் சரியன்று.

பாடல்-144


நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்?

உயர்குடிப் பிறந்தார் நல்ல செயல்களைச் செய்தால் அ·து அவர்க்கு இயல்பு என்று கருதப்படும். தீய செயல்களைச் செய்தால் பழிக்கத்தக்கதாக முடியும். பிறத்தலால் ஒருவர்க்கு உயர்குடிப்பிறப்பு வாய்க்குமானால், வாய்த்த அக்குடிப்பிறப்பால் அவர் அடையும் பயன்தான் என்ன? (உயர்குடிப் பிறப்பால் பயன் என்ன என்று கூறியது பழிப்பது போலப் புகழும் வஞ்சகப் புகழ்ச்சியாம்.)

பாடல்-145


கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந்தார்.

உயர்குடிப் பிறந்தோர் (தாம்) கல்லாமைக்கு அஞ்சுபவர்; கீழோர்க்குரிய இழிதொழிலைச் செய்ய அஞ்சுவர்; தகாத சொற்களை வாய் தவறிச் சொல்லி விடுவோமோ என அஞ்சுவர்; இரப்பார்க்கு ஒன்றும் தடி முடியாமை நேருமோ என அஞ்சுவர். (இவ்வாறு அச்சம் கொள்ளுதல் உயர்குடிப் பிறந்தார் இயல்பாகும்). ஆதலால் இத்தகைய மாண்புகள் அற்ற குடியிற் பிறந்தவர்கள் மரம் போல்வர் ஆவர்.

பாடல்-146


இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.

பாடல்-147

சிறந்த மாணிக்க மணிகள் முத்துக்களுடன் சேர்ந்து ஒளி வீசுவதற்கு இடமான ஒலிக்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! நல்லோர் தொடர்பு, இன்சொல் கூறுதல், வறியார்க்கு ஒன்றைக் கொடுத்தல் மற்றும் மனத்தூய்மை என்னும் இப்படிப்பட்ட நற்குணங்கள் எல்லாம் நல்லகுடியில் பிறந்தவரிடம் பொருந்தியிருக்கின்றன.

பாடல்-147


செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

கட்டுக் குலைந்து கறையான் பிடித்திருந்தாலும் பொய்யா வீடானது, மழைநீர் ஒழுகாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும். அதுபோல, எத்தகைய வறுமைத் துன்பங்களில் ஆழ்ந்திருந்தாலும் நற்குடிப்பிறந்தோர் தம்மால் இயன்ற நற்செயல்களைச் செய்வர்.

பாடல்-148

 ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.

ஒரு பக்கத்தினை இராகு என்னும் பாம்பு பிடித்துக் கொண்டாலும், தனது மற்றொரு பக்கத்தால் அழகிய  இவ்வுலகத்தினை ஒளிபெறச் செய்யும் திங்களைப் போன்று, வறுமையினால் எவ்வளவு துன்புற்ற போதிலும், உயர்குடிப்பிறந்தவர் பிறர்க்கு உதவி செய்வதில் மனம் தளரார்.

பாடல்-149


செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.

மான், சேணத்தைத் தாங்கியிருந்தாலும், பாயும் குதிரைபோலத் தாக்கிப் போரிட இயலாது. அதுபோல, வறுமைக் காலத்தும் உயர்குடிப் பிறந்தார் செய்யும் நல்ல செயல்களைச் செல்வக் காலத்தும் கீழோர் செய்ய மாட்டார்கள்.

பாடல்-150


எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர். 

No comments:

Post a Comment