Friday, October 17, 2014

நாலடியார் - 19.பெருமை -181 முதல் 190 வரை



பாடல்-181

ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.

பொருள் இன்மையால் பிறர்க்கு ஒன்றைக் கொடுக்கவும் இயலவில்லை. இளமையும் வீணாகக் கழிந்துவிட்டது. முன்பு நம்மிடம் பற்றுக் கொண்டிருந்த மனைவி மக்களும் இப்போது அப்படி இல்லை; ஆதலால் 'இன்னும் நாம் வாழ்வோம்' என்னும் ஆசையை விட்டுத் துறந்து போவதே நல்ல செயலாகும்.

பாடல்-182


இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.

இல் வாழ்க்கையை மேற்கொண்டதனால் இன்புற்றோம்; இந்த இல்வாழ்க்கையில் ஒரு குறையுமின்றி இருக்கின்றோம்' என்று எண்ணிப் பின்னர் வரப்போகும் துன்பத்தை மறந்து நடப்பர் அறிவிலாதார். இல்வாழ்க்கை இன்பங்கள் நிலைபெற்றன போல் காணப்பட்டு நிலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒரு போதும் வருந்தார், (இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையர் எதிலும் பற்றற்று இருப்பர் என்பது பெருமையாகும்).

பாட்ல்-183


மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.

இருந்த இடத்தில் இருந்தே இளமை முதலான பருவங்கள் மாறிப் போகும். காரணம் தோன்றாமல் இன்னும் பல வேறுபாடுகளும் உண்டாகும். ஆதலால் மறுமைக்கு வித்தாகிய நல்லறங்களை மயக்கமின்றிச் செய்து அறிவுடையோராய் வாழுங்கள்! (பருவம் முதலியன மாறும்போது மனக்குறையின்றி இருத்தல் பெருமையாம்)

பாடல்-184.


உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.

மழை இல்லாத கோடைக் காலத்தும், நீர் சுரக்கும் கிணறு தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போல, பெரியோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

பாடல்-185


உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.

(மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பெரியோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை).

பாடல்-186


பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.

பெரிய மலைகளைக் கொண்ட நாட்டையுடைய வேந்தனே! பெரியோரிடம் உண்டான குற்றம் பெரிய வெள்ளை எருதின்மீது போடப்பட்ட சூடுபோல எங்கும் விளங்கித் தோன்றும். சிறந்த வெள்ளை எருதைக் கொன்றது போன்ற கொடிய குற்றத்தைச் சிறியோர் செய்தாலும் அது ஒரு குற்றமாகத் தோன்றாமல் மறையும். (பெரியோர் ஒரு குற்றம் செய்தாலும் அ·து எல்லார்க்கும் தெரியும். சிறியோர் எத்தனை செய்தாலும் பிறர்க்குத் தெரியாது. ஆதலால் பெருமையுடையோர் ஒரு சிறிய குற்றமும் செய்யாது தம்மைக் காக்க வேண்டும் என்பது கருத்து).

பாடல்-187


இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.

அற்பத்தனம் மிக்க, நற்குணம் இல்லாதவரிடம் நட்புக் கொண்டிருக்கும் வரை துன்பமே மிகும். விளையாட்டாகக் கூடத் தீயனவற்றைச் செய்ய விரும்பாத நல்லறிவாளரிடம் கொண்ட பகையேனும் பெருமையைத் தரும். (அயோக்கியரிடம் கொள்ளும் நட்பைவிட யோக்கியரிடம் கொள்ளும் பகை நல்லது).

பாடல்-188


மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.

மென்மைத் தன்மையுள்ள மகளிரிடம் மென்மைக் குணம் உடையராய்த் திகழ்க! பகைவரிடத்தில், அந்த மென்மையை விட்டுவிட்டு எமனும் அஞ்சத்தக்க குணம் உடையவராகத் தோன்றுக! பொய்யர்தம் கூட்டத்தில் மிகவும் பொய்யராக மாறுக! நல்லவர் குழாத்தில் நன்மையின் வரம்பாய் விளங்குக! (பொய்யர் கூட்டத்தில் பொய்யராதல் தம்மைக் காக்கும் பொருட்டாம்).

பாடல்-189

கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

ஒருவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பிறர்பற்றி மிகவும் பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித் தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர்பால் சிறிதும் மனவேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர். (புறங்கூறலைப் பொருட்படுத்தாமையும் பெருமையாகும் என்பது கருத்து).

பாடல்-190

முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.

சான்றோர்கள் முன்னர் உண்ணத் தகும் உணவினை நாள்தோறும் அறம் செய்த பின்னரே உண்பர். அப்படி உண்ட உணவு காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் போக்குவதுடன், வாழ்நாள் வரை அவர்களைத் துன்பத்தினின்றும் காப்பாற்றும். (முதலில் உண்பதற்குக் கொண்ட உணவை இரப்போர்க்கு அளித்து மீதியை உண்டு வாழ்பவருக்கு வாழ்நாள் முழுதும் துன்பம் இல்லை; புண்ணியம் உண்டு).

No comments:

Post a Comment