Wednesday, October 22, 2014

நாலடியார் - 23.நட்பிற் பிழை பொறுத்தல்-பாடல் 221 முதல் 230 வரை




பாடல்-221

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

(யாவரும் விரும்பும்) நெல்லுக்கு உமியாகிய குற்றம் உண்டு; தண்ணீருக்கு நுரையாகிய குற்றம் உண்டு; பூவிற்கும் புற விதழாகிய குற்றம் உண்டு; ஆதலால் 'இவர் நல்லவர்' என்று மிகவும் விரும்பி நண்பராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர், பின் கெட்ட குணமுடையவராகத் தோன்றினாலும், அவர்தம் குற்றங்களைப் பிறர் அறியாமல் மறைத்து, அவரை நட்பினராகவே மதிக்க வேண்டும்.

பாடல்-222


செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

தண்ணீர், அடைக்குந்தோறும் கரையினை உடைத்துக் கொண்டேயிருப்பினும், அந்த நல்ல நீருடன் யாரும் சினம் கொள்ளார்; அதனை விரும்பி வாழ்பவர் மீண்டும் அந்த நீரை அணை கட்டித் தடுப்பர். அதுபோலத் தாம் விரும்பி நண்பராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் மனம் வெறுக்கத் தக்க பிழைகளைச் செய்தாலும் சான்றோர் அவற்றைப் பொறுத்துக்கொள்வர்.

பாடல்-223


இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.

பொன்னிறமான கோங்க மலரால் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசனே! ஒருவனுடைய பொறுமையினால் இருவருடைய நட்பு வளரும். ஆதலால் நண்பர் மிகவும் தீயனவற்றைச் செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியான ஒரு செயல் அல்லவா?

பாடல்-224


மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.

மடிந்து விழும் அலைகள் கொணர்ந்து குவித்த ஒளி பொருந்திய முத்துக்களை, மிகுந்த வேகமுள்ள கப்பல்கள் கரையிலே அலையச் செய்கின்ற கடற்கரையையுடைய வேந்தனே! கை விடற்கரிய நண்பர்கள் நற்குணம் இல்லாதவரானால் அவர்கள் நம் நெஞ்சைச் சுடுவதற்காக நம்மாலேயே மூட்டப்பட்ட தீயாவர். (கைவிடற்கரிய நண்பர்கள் மனத்திற்கு வருத்தம் தரும் செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும் என்பது கருத்து).

பாடல்-225


இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

பொன்னுடன் நல்ல வீட்டையும் சுட்டெரிக்கும் நெருப்பை (உணவு படைக்க உதவும் தேவை கருதி) ஒவ்வொரு நாளும் வீட்டில் அதனை உண்டாகிப் போற்றி வருகிறோம். அதுபோல, இடையிடையே துன்பங்களைச் செய்தாலும் கைவிடற்கரிய நண்பர்களைப் பொன்போல் நினைத்து மேலாகக் கொள்ள வேண்டும்.

பாடல்-226


இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற்று என்றுதம் கை.

அடைதற்கரிய வானளவு உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! கண்ணைக் குத்தி விட்டது என்பதற்காக யாராவது தன் கைகளில் உள்ள விரல்களை வெட்டி எறிவார்களா? அதுபோல, துன்பங்களைச் செய்தாலும் அரிய நண்பர்களை விலக்கி விடுதல் தகுதியாகுமோ? ஆகாது.

பாடல்-227


இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.

விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர்.

பாடல்-228


ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

ஒலிக்கும் மலை அருவிகளையுடைய நாட்டுக்கு அரசனே! அயலார் செய்த தீங்கு மிகவும் கொடியதானாலும் இ·து ஊழால் நேர்ந்தது என்று நோக்குங்கால் அதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது? அங்ஙனமிருக்க, அன்பு மிகுந்தவர் உரிமையால் செய்த தீமை நெஞ்சில் நின்று சிறந்ததாகிவிடும். (அயலார் செய்ததை ஆராயுங்கால், வெறுக்கத் தகாததானால் அன்பர் செய்தது பிரியமானதாகும் என்பது கருத்து.)

பாடல்-229


தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.

தம் நண்பர் என்று தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் தம்மை, தம் நண்பராதற்குரிய தன்மையில்லாதவர் என்று பிறகு உணர்ந்தார்களாயின், அப்போதும் அவர்களைத் தம் நண்பர்களைவிட மேலாகக் கருதி, நண்பராதற்குரிய பண்பு இல்லாத அவரது தன்மையைத் தம் மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும். (அப்படிக் குற்றம் மறைத்து அவர்களை மதித்தால் அவர்கள் பிழை உணர்ந்து வருந்தித் திருந்துவர் என்பது கருத்து).

பாடல்-230


குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.

ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது குற்றத்தையும் ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக. 

No comments:

Post a Comment