Monday, October 27, 2014

நாலடியார் - 28.ஈயாமை-பாடல்-271-280



பாடல்-271


நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும்.

பாடல்-272


எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.

எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால் சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப்பயனில் முற்படுவர்;
- மற்றுப். பெருஞ்செல்வம் எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம் என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக் கடலில் வீழ்ந்து அழிந்தவராவர்.

----
பாடாள்-273


துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.

பொருளை உண்டு அனுபவிக்காதவனாய்த் துறவிகளுக்கும் ஒன்றை ஈயாதவனாய், பொருளை அப்படியே விட்டு விட்டு இறந்து போகும் அறிவில்லாதவனை, அவன் தேடி வைத்த பொருளும் நோக்கி (இம்மையில்) என்னை நீ நன்கு பயன்படுத்திக்கொள்ளவில்லையே எனச் சிரிக்கும்.

பாஆடாள்-274

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.

பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத கருமி குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும்.

பாடல்-275

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது.

பாடல்-276

எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.

அறிவில்லாதவன், தான் சேர்த்த பொருளை, 'என்னுடையது என்னுடையது' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். நானும் அப்பொருளை 'என்னுடையது என்னுடையது' என்று எண்ணிக் கொண்டிருப்பேன். ஏனெனில், அ·து அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அது போலவே நானும், அப்பொருளைப் பிறர்க்குத் தராமலும், நான் அனுபவிக்காமலும் இருக்கிறேன். (தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் யாரிடம் இருந்தாலென்ன? வறியவர்க்குக் கொடுக்காத செல்வம், அதனைப் பெற்றவனுக்கும் உதவுவதில்லை என்பது கருத்து).

பாடல்-277


வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.

ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், 'செல்வத்தையெல்லாம் இழந்தார்' என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்; அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.

பாடல்-278


தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

பொருள் தன்னுடையதாக இருக்கும்போது ஓர் உலோபி தானும் பிறர்க்குக் கொடுக்க மாட்டான். அவனுடைய பங்காளிகளும் அப்பொருள் தமதான காலத்தில் கொடுக்க மாட்டார்கள். முதலில் தன்னுடையதாயிருந்தபோது அவன் கொடுக்க முனைந்திருப்பினும் அப் பங்காளிகள் தடுத்திருக்க மாட்டார்கள். பின் பங்காளிகள் கொடுக்கும்போது இறந்துபோன அவன் வந்து தடுக்கமாட்டான். அப்படியிருக்க அவர்கள் கொடாமைக்குக் காரணம் யாதோ?

பாடல்-279


இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

இரப்பவர் கன்றாக இருக்க, கொடுப்பவர் பசுவாக இருந்து அறிவுடன் கொடுப்பதே சிறந்த கொடையாம். அவ்வறிவு இல்லாமல், வல்லவர் கோலால் அடித்து வருத்த, பால் தரும் பசுவைப் போல, வல்லோர் பல சூழ்ச்சி செய்து வற்புறுத்தி வருத்திய பின் கொடுப்பது கீழ்மக்கள் இயல்பாகும்.

பாடல்-280

ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.

பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் அவ்வாறே மிகுந்த துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும் துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம். ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும். (பொருள் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அறிந்து, அதனை இன்பத்திற்கு 

No comments:

Post a Comment