Thursday, October 30, 2014

நாலடியார் - 31.இரவச்சம்-301 முதல் 310வரை



பாடல்-301

நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.

இவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள்' என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே, தெளிந்த அறிவினையுடையார் இரத்தற்குச் செல்வரோ? செல்ல மாட்டார்கள்.

பாடல்-302


இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.

தாழ்வதற்குக் காரணமான இரத்தலை மேற்கொண்டு ஒருவன் வயிறார உண்பதினும், பழிக்கத் தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு இருந்து இறப்பது குற்றமா? ஆகாது. ஏன் எனில் ஒருவன் இறந்தபின் பிறக்கின்ற பிறப்பு, கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்லவா? (இந்த உடம்பு போனால் வேறு நல்ல பிறவி கிடைக்காது என்று கருதவேண்டாம். நல்வினை செய்யுங்கள்! இதை விட நல்ல பிறவி கிடைக்கும்; அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் என்பது கருத்து).

பாடல்-303


இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303

வறுமை காரணமாக இரத்தலாகிய இழிதொழிலைத் துணிந்து மேற்கொள்பவரும் உண்டு. அப்படி இரக்கச் சென்றாலும், அதிலும் மேன்மையைக் கருதும் மேலோர், தம்மை அன்புடன் நோக்கி, 'எங்கள் வீட்டுக்கு வாருங்கள்; உணவு கொள்ளுங்கள்!' என்று விரும்பி அழைத்து உபசரிப்பவர் இல்லத்திற்கு அல்லாமல் வேறோர் இல்லத்தில் தலை காட்டவும் மாட்டார். (வறுமையால் யாசிக்கச் சென்றாலும் கண்ட இடத்திற்குச் செல்லாமல், அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர், ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்புக்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

பாடல்-304


திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

செல்வம் தம்மை விட்டு விலகினாலும், தெய்வம் (ஊழ்வினை) சினந்து வருந்தினாலும், மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி (தொழில் செய்து வாழும் வாழ்க்கை) கருதுவார்களே அல்லாமல், பொருளைப் புதைத்து வைத்துப் பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று, 'என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்' என்று கூறி நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.

பாடல்-305


கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

தம்முடைய பொருளை ஒளிக்காது கொடுக்கும் திடமான அன்புடைய, கண்போன்ற இனியவரிடத்தும் இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை ஆகும். ஏனெனில் 'சென்று யாசிப்போம்' என இரத்தலை நினைக்கும்போதே, நெஞ்சு வெந்து உருகுகிறது. அவ்வாறிருக்க, ஒருவரிடம் பொருளை யாசித்துப் பெறும் போது, அப்பொருளைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ? (என்ன பாடுபடுமோ?)

பாடல்-306


இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.

துன்பங்கள் நம்மிடம் வந்து சேரட்டும்; இன்பங்கள் நம்மைவிட்டு விலகட்டும் (நெஞ்சமே, எதற்கும் அஞ்சாதே! அமைதியோடு இரு!') என வேண்டி மனத்தை நிறைவு (திருப்தி) செய்வதால் தீரும் தன்மையது வறுமை, அப்படியிருக்க, பொருள் ஆசை துன்புறுத்தும் மனத்துடன், அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்? ஒரு பயனும் கிடைக்காது.

பாடல்-307


என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்.

குன்றுகளின் பரந்த இடங்களில் எல்லாம் பொன் பரவுவதற்குக் காரணமான அருவிகளையுடைய மலை நாட்டு வேந்தனே! இவ்வுலகில் எக் காலத்திலும் புதிய மனிதர்கள் பிறந்து கொண்டேயிருந்தாலும், (இனி) என்றும் பிறவாதவன் ஒருவன் உளன். (அவன் எவன் என்றால்) இரப்பாரை இகழாது ஆதரிக்கும் மகனே, அவன்! (யாசிப்பவரை இகழாது அன்ன தானம் செய்து பாதுகாப்பவனே, புதிய புதிய மனிதர் பிறந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் இனிப் பிறவாத நிலையாகிய வீடு அடைவான் என்பது கருத்து).

பாடல்-308


புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, 'ஒன்றைத் தரவேண்டும்' என இரப்பானாகில், அச்செல்வன் 'இல்லை' என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? உயிர்விடுவான். (மானத்தால் உயிர் துறப்பான் என இரங்கிக் கூறியது).

பாடல்-309


ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் - பாசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?

வறியவர் ஒருவர் செல்வர் ஒருவரைச் சார்ந்து, அவர் சொன்னபடி செய்து வணங்கித் தாழ்ந்து வாழ்தல் உலக முறைமை கும். அப்படியின்றி மானம் கெட்டு 'எனக்கு ஏதேனும் தரமாட்டீர்களா?' என்று இரப்பதைவிட, மெல்லப் பிறரைச் சார்ந்து அவர் ஏவல் கேட்டு வாழும் முற்கூறிய வாழ்க்கை அவ்வளவு துன்பம் தருவதோ? (ஒரு தொழில் இன்றிப் பிறரைத் தொழுது உண்டு வாழ்தல் துன்பம் தருவதுதான். ஆயினும் அதை விடத் துன்பம் தருவது இரந்து உண்டு வாழ்தல் என்பது கருத்து).

பாடல்-310


பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ.

நெடுநாள் பழகிய நட்புரிமையே பற்றுக் கோடாக உதவி நாடி வந்தவர்க்கு, அதே நட்புரிமையால் ஒன்றைக் கொடுப்பாராக! அப்படிக் கொடுத்ததை மன நிறைவின்மையால் வந்தவர் ஏற்க மறுப்பின் அது, கொடுத்தவர் மனத்தில் நீங்காது நிலைத்து நின்று சுடும் தீயாகும்.

No comments:

Post a Comment