Thursday, October 23, 2014

நாலடியார் - 24.கூடா நட்பு பாடல்-231 முதல் 240 வரை



பாடல்-231

செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கருமம் முற்றும் துணை.

மேகம் சூழப்பட்ட கா¢ய நிறத்தையும், பொங்கி விழும் அருவிப் புனலையும் உடைய மலை நாட்டு மன்னனே! சுயநலவாதிகள், கட்டுக்கோப்பற்ற பழைய வீட்டின் உள்ளே தண்ணீர் புகாதவாறு அணைகோலியும், முன்னரே புகுந்த நீரை வெளியே இறைத்தும், மேல் விழும் நீரைப் பாத்திரத்தில் ஏற்றும் தம் காரியம் ஆகும் வரை நம்மிடம் இருப்பர்; பின் பிரிவர். (சிலர் ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால், அக்காரியம் முடியும்வரை, அவர் துன்புறுங் காலத்தில் அதனைத் தாங்களும் தாங்கிக் கொண்டிருந்து அக்காரியம் முடிந்தபின் அவரை விட்டு நீங்கிவிடுவர். ஆதலின், இப்படிப்பட்டவருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது கருத்து).

பாடல்-232


சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

மிகவும் வெண்மையான அருவிகளைக் கொண்ட மலை நாட்டு வேந்தனே! உயர்ந்தோர் நட்பு மேலான சிறப்புடையதாய் மழைபோலும் சிறந்த பயனுள்ளதாகும். நற்குணமில்லாதார் நட்பு மிகுந்தால், மழை பெய்யாமல் வறண்ட காலத்தை ஒக்கும். (மழை இல்லாததால் வளம் குறைதலோடு வெயிலும் சுட்டெரிப்பதுபோல, கூடா நட்பால் நன்மையின்றித் தீமை நேரும் என்பது கருத்து).

பாடல்-233


நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.

நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்புச் செய்து அதன் பயனை அனுபவித்தல், விண்ணுலக இன்பத்தினைப் போல மேன்மையுடையதாகும். நுட்பமான நூலறிவு அற்ற பயனில்லாதவருடன் நட்புக் கொள்ளுதல் நரகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போல் துன்பம் தருவதாகும்.

பாடல்-234


பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு.

பக்கங்களில் எல்லாம் சந்தன மரத்தோப்புக்களைக் கொண்ட மலை நாட்டு அரசனே! அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு வளர்வது போலத் தோன்றி (வைக்கோலில் பற்றிய தீயைப் போல) ஒரு கணப்பொழுதும் நில்லாது கெடும்.

பாடல்-235


செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.

செய்ய முடியாத காரியங்களையெல்லாம் நாம் செய்வோம் என்று உரைத்தலும், செய்ய முடிந்த காரியத்தை முடிக்காமல் காலம் கடத்தலும் ஆகிய இவை, உண்மையாகவே, இன்புறத்தக்க பொருள்களையெல்லாம் வெறுத்துத் துறந்தவர்க்கும் அப்பொழுதே துன்பத்தைத் தரும். (செய்ய முடியாததைச் செய்வோம் என்பது வெற்று ஆரவார மொழியாகும்; செய்ய முடிந்ததைச் செய்யாது காலத்தை ஓட்டுதல் நம்பிக்கை மோசடியாகும். எனவே, இத்தகையோருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது பொருள்).


பாடல்-236

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.

ஒரே குளத்தில் தோன்றி, ஒன்றாகவே நீண்டு வளர்ந்த போதிலும், விரிந்து மணம் வீசும் தன்மையுள்ள குவளை மலர்களுக்கு அல்லி மலர்கள் இணையாக மாட்டா. அது போலச் சிறந்த குணங்கள் பொருந்தியவருடைய நட்பைப் பெற்றாலும் நற்குணங்கள் இல்லாதார் செயல்கள் வேறுபட்டிருக்கும். (நல்லோருடன் பழகினாலும் தமது கெட்ட குணத்தை விடாதவருடன் நட்புக கொள்ளக்கூடாது என்பது கருத்து).

பாடல்-237

முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

இளைய சிறிய பெண் குரங்கு, தன் எதிரே வந்த தந்தையாகிய பெரிய ஆண் குரங்கினை, பயற்றம் நெற்றைக் கண்டாற் போன்ற தன் கைவிரல்களால் முறுக்கிக் குத்தி (அதன் கையில் உள்ள கனியை) பறித்துக்கொள்வதற்கு இடமான மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! மனம் பொருந்தாதவரிடம் கொள்ளும் நட்பு துன்பம் தருவதாகும்.

பாடல்-238


முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

என் நண்பன் துன்புற்றபோது விரைந்து சென்று எனது அருமையான உயிரை அவன் கையில் கொடுத்து அவனது துன்பத்தைப் போக்காவிடின், மிக்க புகழுடைய இந்த உலகம் சிரிக்குமாறு, நண்பனின் சிறந்த மனைவியைக் கற்பழித்த பாவி செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக!

பாடல்-239


ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

தேன் கூடுகள் பொருந்திய மலைநாட்டு மன்னனே! நன்மையை அறிவாரோடு கொண்ட நட்பை நீக்கிப் புல்லறிவினையுடையாரோடு கொண்ட நட்பு, பசுவின் நெய் ஊற்றி வைக்கும் பாத்திரத்தில் அந்த நெய்யை நீக்கி, வேப்பெண்ணெயை ஊற்றி வைத்தது போலாகும்.

பாடல்-240


உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோடு ஆடிவிட் டற்று.

அழகுடையவனாக அமைந்த ஒருவனிடம் ஒப்புரவு (உபகாரம்) இல்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீரைக் கலந்தது போலாகும். அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல், நாகப்பாம்பு விரியன் பெடையுடன் புணர்ந்து உயிரை விட்டது போலாகும். (உருவ அழகு இருந்து பயனில் உதவும் பண்பும் வேண்டும் என்பதும் சேரத்தகாதவருடன் 

No comments:

Post a Comment