Saturday, October 25, 2014

நாலடியார் - 27.நன்றியில் செல்வம் - பாடல் 261 முதல் 270 வரை



பாடல்-261


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.

(தான் வாழும் மரத்துக்கு) அருகிலே இருப்பதாகிப் பல பழங்களைக் கொண்டதாக இருப்பினும், பொரிந்த அடி மரத்தையுடைய விளாமரத்தை வெளவால் நெருங்காது. அதுபோல, தாம் இருக்கும் இடத்துக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவராயினும் பெருமையில்லாதார் செல்வம் 'அவர் தருவார்' என ஏழைகளால் நினைக்கத்தக்க தன்மையுடையதன்று.

பாடல்-262

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.

அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையானாலும், அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால், யாரும் கள்ளி மரத்தின்மீது கை நீட்டமாட்டார்கள். அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவரானாலும் அவர் செல்வம் பயன்படாமையால் கீழ்மக்களை அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள்.

பாடல்-263


மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.

மக்கள், மிகுந்த அலைகளையுடைய கடற்கரையில் இருந்தாலும், தோண்டத் தோண்டச் சிறிதே சுரக்கும் உப்புச்சுவை இல்லாத கிணற்றைத் தேடிச் சென்று நீரைப் பருகுவர். அதுபோல, அருகில் இருப்பவர் மிகுந்த செல்வம் உடையவர்களானாலும் ஈயாதாரை விட்டு தூரத்தில் சென்று, உதவுகின்றவரிடத்திலே விரும்பிக் கேட்டுப் பெறுவர்.

பாடல்-264


புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தரி¢யும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)

பாடல்-265


நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.

இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை.

பாடல்-266

நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.

நறுமணமற்ற புற இதழைப்போல, நல்ல தாமரை மலரிலே இருக்கும் அழகான பதுமை போன்ற திருமகளே! நீ பொன்போன்ற நல்ல குணமுடைய மேன்மக்களை விட்டு விலகி, கீழ்மக்களைச் சேர்கிறாய்! ஆதலால் பூமியில் சாம்பலாகி அழிந்து போ! ('நறுமணம் இல்லாமலே பூவிலிருக்கும் புற இதழ் போல, நீயும் நற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய்!' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. தீயோர் செல்வம் சீக்கிரம் தொலைதல் நன்று; இல்லையேல் அது பிறர்க்கும் தீங்கு உண்டாக்கும் என்பது கருத்து).

பாடல்-267


நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.

வேல் போன்ற கண்ணையுடையவளே! பிறர்க்கு உதவும் நல்ல குணங்கள் உள்ளவரி
டத்தே இருக்கும் வறுமைக்கு வெட்கம் இருக்காதோ? ஒருவருக்கும் நன்மை செய்யாத கீழ்மக்களிடம் உள்ள செல்வம் அவர்களை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொள்ளும் பிசினோ! இந்த வறுமையும் செல்வமும் ஆகிய இரண்டும் நல்லோரிடமும் கீழோரிடமும் விரும்பத்தகாத முறையில் நிற்கும் தன்மைகளைக் கண்டு நீ வியப்பாயாக!

பாடல்-268


வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.

வெட்கமற்றவர்கள் அல்லாதார் (வெட்கம் உள்ளவர்கள்) வறுமையுற்றபோதும் நடந்து சென்று ஆங்காங்கே (செய்யும் சிறு தொழிலால்) பெறும் கலவைச் சோற்றை உண்டு காலத்தைக் கழிப்பார்கள். வெட்கமற்றவர்கள் காலால் நடந்துசெல்லாராகி (உழைப்பின்றி) தம் வீட்டினுள்ளேயேயிருந்து, உடல்மேல் வியர்வை மிகுதியாக வடிய, பொரிக்கறியுடன் கூடிய உணவைத்தாமே உண்டு மகிழ்வர். (நாணமில்லார் தமது செல்வத்தைப் பிறர்க்குத் தராமல் தாமே அனுபவிப்பர் என்பது கருத்து).

பாடல்-269


பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.

பொன்போலும் நிறமுடைய செந்நெற் பயிரானது, தன்னுள் பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடிக் கொண்டிருக்க, மின்னல் விளங்கும் மேகமானது, அங்கே பெய்யாது, கடலிலே பெய்துவிடும். அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால் அவர் கொடையும் அத்தன்மையாகும். (அறிவற்றவர் தாம் பெற்ற செல்வத்தால் செய்யும் உதவி நல்வழியில் அமையாது)

பாடல்-270


ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

உலக நடையினை அறியும் அறிவிலாதார் கற்றவராயினும் கல்லாதவரே ஆவர்; உலக நடையினை அறியும் அறிவுடையார் கல்லாராயினும், கற்றவரே ஆவர். வறுமையுற்றாலும், மனம் தூயராய் இருந்து, பிறரிடம் சென்று ஒன்றையும் இரவாதவர், செல்வரே ஆவர். செல்வரும் வறியோர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவாராயின், வறியரே ஆவர். (உலகியல் அறிவும், கொடைக்குணமும் இன்றேல் செல்வம் சிறப்படையாது என்பது கருத்து)

No comments:

Post a Comment