Tuesday, October 28, 2014

நாலடியார் - 29.இன்மை- பாடல் 281 முதல் 290 வரை



பாடல்-281

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.

பாடல்-282


நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.

தண்ணீரை விட நெய் நுட்பமானது என்பர்; அந்த நெய்யைவிடப் புகை நுட்பமானது என்பதனை யாவரும் அறிவர். ஆராய்ந்து பார்க்குமிடத்து இரத்தலாகிய துன்பம் உடையவன் அப்புகையும் புகுதற்கு அரிய துவாரத்தில் நுழைந்து செல்வான். (வறுமையாளன் எல்லாக் காவலையும் கடந்து, செல்வரை நாடிச் செல்வான் என்பது கருத்து).

பாடல்-283


கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.

கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பெரிய கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.

பாடல்-284


உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

உயிர் நீங்கிப் பிணமானபோது அதனைப் பிடுங்கித் தின்னக் கூடும் காக்கைக் கூட்டம் போல, ஒருவன் செல்வத்தோடு திகழும் காலத்தில், அவனுக்குத் தொண்டு செய்ய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்; ஆனால் அவனே வறுமையுற்று வண்டு போலப் பல திசைகளிலும் சென்று ஒரு வேளை சோற்றுக்காக அலைந்து திரியும் காலத்தில் அவனைப் பார்த்து, 'தீதில்லாமல் வாழ்கிறீரா?' (நலந்தானா?) என்று வினவுவார் இல்வுலகில் யாரும் இல்லை.

பாடல்-285


பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

ஒலிக்கும் அருவிகள் கல்மேல் வீழ்ந்து அதன் மாசு போகக் கழுவும் பெரிய மலைகளையுடைய நாட்டுக்கு மன்னனே! உலகில் வறுமையால் சூழப்பட்டவர்க்கு, அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; பெரிய வல்லமை கெடும்; சிறந்த கல்வியும் கெடும்.

பாடல்-286


உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.

வயிற்றின் உள்ளே மிகுந்த பசியால் துன்பமெய்தித் தன்னிடத்தில் விரும்பி வந்தவர்க்கு, உள்ளூரில் இருந்தும் கூட ஒன்றும் கொடுக்க இயலாதவன், அங்கேயே இருந்து தனது வாழ்நாளை வீணாகக் கழித்து உயிர்விடாது, வேறெந்த ஊருக்காவது போய்ப் பிறருடைய வீட்டில் விருந்தாளியாக இருப்பதே நல்லது. (பிறர்க்கு உதவமுடியாத வாழ்க்கை வீண் வாழ்க்கை என்பது கருத்து).

பாடல்-287


நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.

கூர்மையினால் முல்லை அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் சேரப் பெற்றவர், தமது சிறந்த குணங்களையே அல்லாமல் தம்மிடம் நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும், மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒருசேர இழப்பர்.

பாடல்-288


இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

வறுமை என்னும் குழியில் விழுந்து துன்புற்று, ஏதாவது ஒரு பொருளை யாசித்து வருபவர்க்கு உதவ முடியாமல், முட்டுப்பாடான வறுமை நெறியிலே தானும் நின்று முயற்சியால் ஒன்றும் ஆகாமல் உள்ளூரில் வருந்தி வாழ்வதைவிட, நெடுந்தூரம் நடந்து சென்று, வெளியூர்களில் வரிசையாக இருக்கும் வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட வழியில் வாழ்வதே நலமாம். (இரப்பார்க்கு ஒன்று தர இயலாத வாழ்க்கை, இரத்தலினும் துன்பமானது என்பது கருத்து).


பாடல்-289

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.

அனுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்றபோது, (முன்பு) பொற்கடகம் அணிந்திருந்த தம் கைகளாலே, செடியை வளைத்துக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய் வேகவைத்து, பனையோலைக் குடைகளையே பாத்திரமாகக் கொண்டு, உப்பில்லாது வெந்த அந்தக் கீரையை உண்டு மனவூக்கம் குன்றித் துன்பத்துடன் வாழ்வர்.

பாடல்-290


ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.

No comments:

Post a Comment