Friday, September 12, 2014

திரிகடுகம்- 56 முதல் 65 வரை


பாடல்-56

முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு.


     இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும்.

பாடல்-57

கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப்
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும்
கேள்வியுள் இன்னாதன.


     தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.

பாடல்-58

பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும்
மன்னர்க்கு இளையான் தொழில்.


     முன்னோரோடு பழகியவர்களைக் காப்பதும், சுற்றத்தாரைக் காப்பாற்றுவதும், நல்லினத்தாருடன் நட்பு கொள்வதும் இளவரசன் செய்ய வேண்டியவைகளாகும்.

பாடல்-59

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்
உள்ளன போலக் கெடும்.

     சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும்.

பாடல்-60

பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூஉம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும்.


     பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.

பாடல்-61

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,
எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள்.


     ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.

பாடல்-62

நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார்.


     நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

பாடல்-63

நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும்
ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.


     துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும்.

பாடல்-64

நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.


    விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

பாடல்-65

அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற
விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய
மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு.


     ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.

1 comment:

  1. ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.

    arivu sarndha ilaykiyam arumai vazhthukkal

    ReplyDelete