Sunday, September 28, 2014

நாலடியார்-அறத்துப்பால்



2)இளமை நிலையாமை

பாடல்- 11

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.

நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.

பாடல்-12


நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

நட்பாகிய கயிறுகள் அற்றுப் போயின; பெண்களும் அன்பில் குறைந்தனர்; சுற்றத்தாரின் அன்பாகிய கயிறும் அவிழ்ந்து வீழ்ந்தது; மனத்திலே யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி உயிரோடு இருப்பதில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இல்லை.

பாடல்-13


சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.

பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் பேரின்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

பாடல்-19


தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும்.

பாட்ல்-15


எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.

எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டு விட்டுத் தனக்கொரு தாயைத் தேடிப் போனாள். (இறந்துவிட்டாள்) அப்படிப் போன என் தாய்க்குத் தாயாக இருந்த என் பாட்டியும், தனக்கொரு தாயைத் தேடிச் சென்றாள். இத் தன்மையாய் இந்த உலகம் ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டு செல்லும் எளிமை உடையது!

பாடல்-16


வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

வெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவா¢டத்து இல்லை!

பாடல்-17

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்!

பாடல்-18

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

வயது எத்தனை ஆயிற்று? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்கிறதா? இரு புறங்களிலும் மென்று தின்ன முடிகிறதா?' என்று வயதானவர் நிலையைக் கேட்டறிவதால், அறிவுடையோர், இளமையின் உடல் வலிமையை நிலையானது என்று கருதமாட்டார்கள்.

பாடல்-19


மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு.

பாடல்-20

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது

No comments:

Post a Comment