Sunday, September 14, 2014

திரிகடுகம்-76 முதல் 85 வரை



பாடல்- 76

மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்
காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர்
போற்றற்கு அரியார், புரிந்து.

     மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், பொருள் வருவாயில் நாட்டம் கொண்ட வேசையும், வெற்றியை விரும்புகின்ற வீரனும், போற்றுதற்கு உரியராவார்.

பாடல்-77

கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள.


     கீழ்மக்களைச் சேராமல் வாழ்தலும், நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும்.

பாடல்-78

தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள்.



     தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.

பாடல்-79

பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்
கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து
இல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்.

     பழிக்கு அஞ்சாமல் பசு போல் உயிர் வாழ்கின்றவனும், கேடு வந்த போது அரிய தவத்தினை விட்டவனும், தனக்கு உட்பட்டவளாக இருந்தாலும் மனைவிக்கு அஞ்சி எருது போல் வாழ்பவனும், எப்பொழுதும் துன்பப்படுவர்.

பாடல்-80

முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.


    முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.


பாடல்-81

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.


     பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

பாடல்-82

சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி.

     நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.

பாடல்-83

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;
நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;
செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்
செப்ப நெறி தூராவாறு.


     உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

பாடல்-84

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்
நல் குரவு சேரப்பட்டார்.


     வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள்.

பாடல்-85

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.


     தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.

1 comment:

  1. விவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
    http://vivadhakalai.blogspot.com/

    ReplyDelete