Friday, September 5, 2014

திரிகடுகம்



பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் மற்றொரு நூல் திரிகடுகம்.இதை இயற்றியவர் நல்லாதனார்.

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு,திப்பிலி  ஆகிய மூன்று மருத்துவ குணம் பெற்ற பொருட்களைக் குறிக்கும்.இம்மூன்று மருந்து பொருட்களும் உடல் நலத்தைக் கொடுப்பது போல, நூறு செய்யுட்களைக் கொண்ட திரிகடுகம் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற
அறங்களைச் சொல்கிறது.இவை உயிர் நலத்தை பேணுவனவாகும்.ஆகவேதான் இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.


     உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
     அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
     திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
     மருவு நல்லாதன் மருந்து.

என வரும் பாயிரச் செய்யுளும் இதையே உணர்த்துகின்றது.

     இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக் கூறும் முறை போற்றுதற்குரியது. பொதுக் கருத்துக்கள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன.

இனி திரிகடுகம்.

கடவுள் வாழ்த்து

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.


     உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.



முதல் பாடல்-

அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.


     அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.

இரண்டாம் பாடல்-

தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில்.


   தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.

மூன்றாம் பாடல்-

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.


     கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

நான்காம்  பாடல்-

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்
சாவ உறுவான் தொழில்.


     பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

பாடல்-5

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி.


     பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

1 comment: